🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஸ்ரீராம் குழும நிறுவனர் முத்துக்குமார் ராஜாராம் தலைவராகத் தேர்வு!

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக சென்னை ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவன தலைவரும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளர் மற்றும் உறுப்பினருமான திரு.முத்துக்குமார் ராஜாராம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,

புறநகர் சென்னையின் பிரதான நகரங்களில் முக்கியமான ஒன்று செங்குன்றம். கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நகரம் சென்னையின் பிரதான நுழைவுவாயில்களில் ஒன்று. ஆந்திர மாநில எல்லைக்கும் சென்னை மாநகருக்கும் மையத்தில் அமைந்துள்ள இந்நகரில் தான் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் மூன்று ஏரிகளில் ஒன்றான செங்குன்றம் ஏரி (புழல் ஏரி) அமைந்துள்ளது.

1970-களில் தென்மாவட்டத்திலிருந்து இந்நகருக்கு குடிபெயர்ந்து படிப்படியாக வளர்ச்சிபெற்று, தலைநகர் சென்னையில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் அடையாளமாக மாறிப்போனவர் மறைந்த திரு.இராஜாராம் அவர்கள். செங்குன்றம் பேருந்து நிலையத்தின் நேர் எதிர்ப்புறமாக ஸ்ரீ விக்னேஷ் பவன் என்ற பெயரில் தங்கும் விடுதியுடன் கூடிய உணவகம் நடத்தியவர். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து வரும் கம்பளத்தார் எவருக்கும் வேடந்தாங்கலாக அன்று முதல் இன்றுவரை இருந்துவரும் ஸ்ரீ விக்னேஷ் பவன் தற்போது பெயர் மாற்றமும், உருமாற்றமும் பெற்று புதுப்பொழிவுடன் ஸ்ரீராம் பவன் என்றபெயரில் தங்கும் விடுதியுடன், வர்த்தக நிறுவனங்கள் பல சூழ இயங்கி வருகிறது.


திரு.இராஜாராம் அவர்களின் மறைவுக்குப்பிறகு ஸ்ரீராம் பவன் ஹோட்டலின் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவரது இளைய மகன் திரு. முத்துக்குமார் ராஜாராம் அவர்கள், ஸ்ரீராம் குழுமமாக விரிவுபடுத்தி போட்டோ ஸ்டூடியோ, ரியல் எஸ்டேட், வணிக வளாகம், சரக்குப் பெட்டகம், ஆட்டோ மொபைல்ஸ், ரீட்டெயில் ஷாப், காபி எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

தலைநகர் சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வேரூன்றி விருட்சமாக வளர அடித்தளமிட்டவர்களில் ஒருவராகவும், காவல் அரணாகவும் இருப்பவர் திரு.முத்துக்குமார் ராஜாராம். வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளராகவும், சங்க ஆலோசகராகவும் இருந்து வரும் முத்துக்குமார் அவர்கள், திருவள்ளூர் மாவட்ட ஹோட்டல் சங்க உரிமையாளர்கள் சங்கத்தில் முக்கியப் பங்காற்றியதோடு, செங்குன்றம் நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தை தோற்றுவித்து, அதன் வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றியவர்.

எனினும், சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் நேரடியாகப் பங்கேற்காமல் விலகியே இருந்து, தேவையான உதவிகளை மட்டுமே செய்து வந்த திரு.முத்துக்குமார், தற்போது நிர்ப்பந்தத்தின் பேரில் செங்குன்றம் நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவராக ஒருமனுதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்கத்திற்கு இவரின் தேவையையும், தேர்வையும்  மெய்ப்பிக்கும் வகையில் தலைவர் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருசில நாட்களிலேயே செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சங்கத்திற்கென 45 லட்சம் மதிப்புள்ள ஒரு கிரவுண்ட் நிலத்தை சொந்தமாக்கிக் கொடுத்துள்ளார் என்ற செய்தியை ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளனர்.


செங்குன்றம் நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முத்துக்குமார் அவர்களுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved