ரோட்டரி கிளப் செயலாளராக மரு.பொம்முசாமி தேர்வு!
நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள அரசுப்பள்ளிகளுக்கு குடிநீர் கலன்கள், இலவச டயாலிசிஸ் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தப்படவுள்ளதாக ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டியின் செயலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருப்பூர் செஸ்ட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பொம்முசாமி தெரிவித்துள்ளார். இதன் விவரம் வருமாறு,
ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பல நலத்திட்டங்களை இந்த ரோட்டரி கிளப் செயல்படுத்திவருகிறது. இதற்கிடையே திருப்பூர் ஸ்மார் சிட்டி ரோட்டரி கிளப்பின் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் செஸ்ட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், சிறந்த சமூக செயற்பாட்டாளருமான மருத்துவர் கே.பொம்முசாமி அவர்கள் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். AKS.P.அருள்செல்வம் அவர்களை தலைவராகக்கொண்டு செயல்படவுள்ள புதிய நிர்வாகிகள், தங்கள் பதவி காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள தீர்க்கமான திட்டங்களை முன்வைத்துள்ளனர்.

அதன்படி, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் சுத்தீகரிக்கப்பட்ட, பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் கலன்கள், நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனங்கள், இலவச டயாலிசிஸ் சிகிச்சை, வலி மற்றும் நோய்தடுப்பிற்காக 2 - 5 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர சிகிச்சை மையம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திட்டங்களை நிச்சயம் செயல்படுத்தும் துணிவும், ஆற்றலும் புதிய நிர்வாகிகளிடம் உண்டு என்பதைக் கட்டியம் கூறும் வகையில், புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ள அருள்செல்வம் அவர்கள் தன் தனிப்பட்ட சொந்த நிதியிலிருந்து ரூபாய் 3 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 6-ஆம் தேதி ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டியின் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர் பொம்முசாமி மற்றும் அவரது குழுவினருக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

