குரங்கு பிடிக்கப்போய் பிள்ளையார் கிடைத்த கதை தெரியுமா?
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதை என்ற சொலவடை அனைவருக்கும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு நேர்மாறாக குரங்கு பிக்கப்போய் பிள்ளையார் கிடைத்தால் எப்படியிருக்கும். அப்படித்தான் நடந்தது கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரு சாதனமாகிய பேஸ்மேக்கர் எனப்படும் இதயமுடுக்கி கண்டுபிடிப்பின் போதும்/ இது பற்றிய கதை மிகவும் சுவாரஸ்சியமானது.
அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் வில்சன் கிரேட்பீச் என்பவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் உலகப் போருக்குப் பின் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் (Cornel university) உயிரியல் துறையில் பணியில் அமர்ந்து விலங்கு பண்ணையில் விலங்குகளின் பழக்கவழக்கங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். அமெரிக்க கம்பெனி உருவாக்கிய சிலிகான் டிரான்ஸ்சிஸ்டரை வைத்து விலங்குகளின் இதயத் துடிப்பைப் பதிவுசெய்து கொண்டிருந்தபோது தவறுதலாக இணைக்கப்பட்ட ஒயர்களால் சமச்சீரற்ற இதயத்துடிப்பிலிருந்த விலங்கின் இதயத்தில் சீரான ‘லப்’ ‘டப்’ தாளத்தைக் கண்டறிந்தார்.
பின்னர் தனது முழு கவனத்தையும் செலுத்தி இதயத்தைச் சமச்சீராக செயல்படுத்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர் மே 7 - ஆம் தேதி 1958 - ஆம் ஆண்டு உடலினுள் பொருத்தும் சிறிய பேஸ்மேக்கரைக் கண்டுபிடித்தார். முதல் பேஸ்மேக்கர் நாயின் உடலினுள் சார்டக் மருத்துவமனையில் (Chardack Hospital) வைத்து பொருத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கு வில்சனின் நண்பர்கள் வில்லியம் சார்டாக் மற்றும் ஆன்ட்ரு கேஜ் முழுமையாக உதவி புரிந்தார்கள். ஆனால், இந்தக் கருவி நான்கு மணி நேரமே வேலை செய்தது. பின்னர் பல தவறுகள் சீர் செய்யப்பட்டு லித்தியம் பேட்டரியில் இயங்கும் பேஸ்மேக்கர் உருவாக்கப்பட்டது. வில்சனின் அயராத ஆர்வத்தால் இக்கருவிக்கு காப்புரிமை கிடைத்தது.
இந்த வழியில் அவர் தற்செயலாக இதயமுடுக்கியைக் கண்டுபிடித்தார். இந்த சாதனம் கடந்த அறுபது ஆண்டுகளில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் 90 சதவீத இதயமுடுக்கி சாதனங்களுக்கான பேட்டரிகளை கிரேட்பேட்ச் நிறுவனம் தயாரித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தனது ஒரு தவறின் மூலம் நீண்ட ஆயுளைக் கொடுத்த கிரேட் பேட்ச் அவர்களும் 92 வயது வரை வாழ்ந்தார்.

