🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மனாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு அனுமதி!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு விருதுநகர் மாவட்டத்தில் திருவுருவச்சிலை அமைக்க வேண்டுமென்ற சமுதாய மக்களின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிய நிலையில், அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் வெற்றிபெற்றுள்ளது வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை. இதன் விவரம் வருமாறு,

சுமார் 18-ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத் தியாகி அமரர்.வையப்பநாயக்கர் குருபூஜை நிகழ்ச்சி கீழமுடி மன்னார்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. இதில் அன்றைய அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோருடன் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய சமுதாயத் தலைவர்கள் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு விருதுநகர் மாவட்டத்தில் திருவுருவச்சிலை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்று அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தனர். அந்நிகழ்வில் இறுதியாகப்பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்கள், கம்பளத்தார்கள் விரும்பும் உரிய இடத்தை அடையாளங்கண்டு, தேர்ந்தெடுத்து வழங்கினால் தன்னுடைய சொந்த செலவில் வெங்கலச்சிலை அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தார். இதனையடுத்து பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து, ஆய்வு மேற்கொண்ட நிலையில், மக்கள் விரும்பும் இடம் அமையாமல் போனதால், சிலை அமைப்பதில் காலதாமதமாகிக்கொண்டே வந்தது.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும், மீண்டும் இக்கோரிக்கை வலுப்பெற்றுவரவே, பொதுமக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பிரபல தொழிலதிபர்களான திரு.மணிவாசகன், திரு.கிருஷ்ணன், திரு.மலைராஜன், திரு.மகேஷ்வரன் உள்ளிட்ட பலர் சிலை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தினர். இதன் பலனாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்களின் ஆலோசனையின்படி  வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல்குடி அருகே 10 சென்ட் நிலத்தை சமுதாய சொந்தம் ஒருவரிடமிருந்து தானமாகப்பெற்றனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சரின் வழிகாட்டுதலின்படி அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் மாவீரன் கட்டபொம்மன் சிலை அமைக்க அனுமதியளிக்குமாறு விருதுநகர் ஆட்சியரிடம் கடந்த மே மாதம் விண்ணப்பித்தனர்.

இதனையடுத்து கோப்பு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாவட்ட கண்காணிப்பாளர், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், கூடுதல் தலைமைச்செயலாளர் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது அனைத்துத்துறையினரின் அனுமதியும் பெற்று 15-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் கட்டபொம்மனாரின் திருவுருவச்சிலை நிறுவ தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. 

பொதுவாக சிலை அனுமதிக்கோப்புகள் அரசு அலுவலகங்களில் நத்தை வேகத்தில் நகர்ந்து, பல ஆண்டுகளை இழுத்தடித்து காலத்தை விழுங்கியபின் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வரும். ஆனால் கட்டபொம்மனார் சிலை விசயத்தில் அரசு அனுமதி வாங்கும் பொறுப்புக்களை தானே ஏற்றுக்கொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்கள், தனி அலுவலர் ஒருவரை நியமித்து கோப்புகளை ஒவ்வொரு இடமாக நகர்த்திச்சென்று உரிய அனுமதியை ஒருசில மாதங்களில் பெற்றுக்கொடுத்துள்ளார். இவ்விசயத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள் அமைச்சரை முழுமையாகப் பயன்படுத்தி சிலைக்கான பெரும்பகுதி வேலையை சுலபமாக முடித்துள்ளனர்.

மக்களின் நீண்டநாள் காத்திருப்பை நிறைவேற்றும் பணியில் விரைந்து செயல்பட்டு அனுமதி பெற்றுக்கொடுத்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கும், கட்டபொம்மன் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும்,உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved