இன்று நிர்வாக அதிகாரம்,,,, நாளை அரசியல் அதிகாரம்...
புதிய பொருளாதரக்கொள்கை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகாரணமாக அரசுப்பணி நியமனங்கள் கடந்த 25 ஆண்டுகளாக மிக சொற்ப அளவிலேயே நடைபெற்று வந்தது. இதனால் தேர்வாணையம் சம்பிரதாயத்திற்காக அவ்வப்பொழுது தேர்வுகளை நடத்தி, நீண்டநாட்கள் முடிவுகளைஅறிவிக்காமல் காலதாமதம் செய்வதும், வெற்றி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்காமல் இழுத்தடித்ததுமாக இருந்து வந்தது. இதற்கிடையே 2021-இல் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சுமார் 75000 அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
முதல்வர் அறிவித்தபடி 75 ஆயிரம் பணியிடங்கள் இந்த ஆட்சி முடிவதற்குள் நிரப்பப்படாமல் கூடப்போகலாம், ஆனால் தேர்வாணையத்தையும், அதன் செயல்முறைகளையும் முற்றிலும் மாற்றியமைத்து அரசுப்பணிக்கு செல்ல விரும்புவோருக்கு நம்பிக்கையளித்துள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதன்பலனாக ஆண்டுதோறும் இன்னதேதிதியில் இன்ன தேர்வு நடைபெறும், இதன் முடிவுகள் இந்த காலத்தில் வெளியிடப்படும் என்ற அடிப்படை விதியை வகுத்து செயல்படுவதோடு, தேர்வுகள், முடிவுகள் மற்றும் பணிநியமனங்கள் முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையோடு தேர்வாணையம் நடத்தி வருவது பாராட்டுக்குறியது. எந்தவித முறைகேடுகளுக்கும் இடம்கொடுக்காமல், முழுக்க முழுக்க தகுதி அடைப்படையிலேயே பணிநியமனங்கள் நடைபெற்றுவருவது தேர்வர்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்துள்ளது. இதனால் போட்டித்தேர்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது.

இதன்பலனாக தொட்டிய நாயக்கர் சமூகத்தில் அரசுப்பணிக்காக தயாராகிவருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதோடு, தமிழக அரசுப்பணியாளர் தேர்வுவாரியம் நடத்தும் தேர்வுகளில் வெற்றிபெருவோரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இதுவரை அரசுப்பணி என்றாலே ஆசிரியர் வேலைதான் என்பதைத் தாண்டி குரூப்4 தேர்வுகளில் வெற்றிபெற்று பல்வேறு துறைகளில் கடந்த சில ஆண்டுகளாக கம்பளத்தார் சமுதாயத்தினர் பணிநியமன ஆணை பெற்றுவருகின்றனர்.
கடந்த ஆண்டு தேர்வில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவு தேர்வான நிலையில் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இதுகுறித்து நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளைத் தலைவர் வெளியிட்டுள்ள முதல் பட்டியலின்படி, இராசிபுரத்தைச் சேர்ந்த திரு.மணிமோகன் - திருமதி.பூங்கொடி அவர்களுடைய புதல்வி ம.வசந்த கோகிலா தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்று வனவர் (Forester) பதவிக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ள நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தொட்டிபட்டியைச் சேர்ந்த ஏ.சங்கீதா இடைநிலை ஆசிரியராக சேலம் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதுதவிர இன்னும் சிலர் அடுத்தகட்ட கலந்தாய்வின் போது பணிநியமனம் பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.அழகாபுரியைச் சேர்ந்த திரு.P.முருகன் - திருமதி.ஜெயமீனா அவர்களின் புதல்வி எம்.பிரீத்தி குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்று வணிகவரித்துறையில் துணை வணிகவரி அலுவலராகப் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசியல்துறையில் கம்பளத்தாருக்கு வாய்ப்பில்லை என்ற சோகக்குரல் நீண்டநாட்களாக எதிரொலிக்கும் சமுதாயத்திலிருந்து, தகுதியடிப்படையில் மாற்றுவழியில் அதிகார மையத்திற்குள் நுழைந்து , பல்வேறு துறைகளில் பனிநியமனம் பெற்று தமிழக அரசு ஊழியராகி, மக்கள் பணியாற்ற வந்துள்ள கம்பளத்தார் சமுதாய இளைஞர் மற்றும் யுவதிகள் சிறந்த முறையில் பணியாற்றி சமூகத்தின் பெருமையை நிலைநாட்டிட வாழ்த்துவதாக இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

