சாதனையாளர் விருதுவென்ற சமுதாயத் தலைவர் மகனுக்கு வாழ்த்துகள்!
சாதனையாளர் விருதுவென்ற சமுதாயத் தலைவர் மகனுக்கு வாழ்த்துகள்!
கடந்த வெள்ளிக்கிழமை (15.08.2025) நாட்டின் 79-வது சுதந்திரதினம் நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற நிலையில் அதையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் இராஜகம்பள சமுதாயத் தலைவர்களுக்கு பல அமைப்புகள் விருது வழங்கி கௌரவித்துள்ளன. இதன் விவரம் வருமாறு,
79-வது சுதந்திர தினத்தில் நாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த தலைவர்களுக்கு மரியாதை செய்வதோடு, பெற்ற விடுதலையைப் பேணிக்காக்கும்வகையில் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றுபவர்களை அடையாளங்கண்டு கௌரவிப்பதை அரசு முதல் தனியார் அமைப்புகள் வரை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தவகையில் விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள லட்சுமி காலனி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராக பொறுப்புவகித்து வரும் திரு.வை.மலைராஜன் அவர்கள் ஆற்றிவரும் சமூகப் பணிக்காக விருதுநகர் நகர மன்றத் தலைவர் வழங்கும் சிறந்த சாதனையாளர்'2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இராஜகம்பள மகாஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் வையப்ப நாயக்கரின் மகனான திரு.வை.மலைராஜன் லட்சுமி காலனி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் தனது சிறப்பான சேவையால் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற பகுதியாகவும், பாதுகாப்பு, சுகாதாரம், தூய்மை ஆகியவற்றிற்கு முன்னுரிமை தந்து தனித்துவமிக்க பகுதியாக மாற்றியமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தன்னலமற்ற சேவைக்காக சுதந்திர தின விழா நிகழ்வில் விருதுநகர் நகர மன்றத் தலைவர் திரு.SR.மாதவன் அவர்கள் சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கினார்.
சிறந்த சமூக ஆர்வலர் விருது வென்ற வை.மலைராஜன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், சமுதாயப்பெருந்தலைவரின் மகன் தன் சமூகப்பணியை சிறிய குடியிருப்புப்பகுதிக்குள் சுருக்கிக்கொள்ளாமல், நாடு தழுவிய அளவில் தந்தையார் வழியில் சமுதாயப்பணியைத் தொடர்ந்திட வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார்.

