🔴 LIVE | முப்பெரும் விழா 2023


த.வீ.க.ப.பொதுச்செயலாளருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது!

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநிலப் பொதுச்செயலாளரும். பனியன் தொழிலாளர் தொழிற்சங்கச் செயலாளருமான திரு க.ராமகிருஷ்ணன் அவர்களின் சமூகநலப்பணிகளைப் பாராட்டும் விதமாகச் தனியார் அறக்கட்டளை ஒன்று சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு,

திருப்பூர் பனியன் தொழிற்சங்கச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் திரு.க.இராமகிருஷ்ணன். 35 ஆண்டுகால தொழிற்சங்கப்பொறுப்பில் திருப்பூர் பனியன் நிறுவனங்கள் சந்தித்த அனைத்து ஏற்ற இறக்கங்களையும், சவால்களையும் கண்ணுற்ற அனுபவத்தின் அடிப்படையில் நெருக்கடி நிலை எதுவானாலும் தொழிலாளர் நலன்காக்க உறவுப்பாலமாக செயல்பட்டவர். அகில் பேக்கேஜிங் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் க.இராமகிருஷ்ணன், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு சமுதாயப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். மதுஒழிப்பு, டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் போன்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுபவர், சமீபத்தில் நாமக்கல் அருகே பள்ளி ஒன்றில் பணியாற்றிவந்த கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த ஓட்டுநர் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பள்ளி நிர்வாகத்திடம் போராடி குடும்பத்தினருக்கு 8 லட்சம் இழப்பீடு பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.இராமகிருஷ்ணன் அவர்களது தொடர்ச்சியான சமூகப்பணியை அங்கீகரிக்கும் வகையில் திருப்பூரிலிருந்து செயல்பட்டு வரும் ஓம் முருகா அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி பாராட்டியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழறிஞர் திருஞானசம்பந்தன் அவர்கள் இவ்விருதை வழங்கினார். 

சிறந்த சமூக சேவகர் விருது வென்ற க.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved