அதிமுக மாவட்டப் பொறுப்பாளராக இளம் செயல்வீரர் மோகன் நியமனம்!
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியும், வலிமை மிக்க இயக்கமுமான அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட பூத் கமிட்டிப் பொறுப்பாளராக இளம் அரசியல் பிரமுகரான திரு.ஜி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனயடுத்து சமுதாயத் தலைவர்கள் மோகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் பின்வருமாறு,
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 17-வது சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகக் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. சிறிய கட்சிகள், ஜாதிக்கட்சிகள் போன்றவை பிரதானக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து கணிசமான தொகுதிகளைப் பெறும் முனைப்பில் மாநாடுகள் வாயிலாக தங்கள் வலிமையை நிரூபிக்க முயன்றுவரும் அதேசமயம் பெரிய கட்சிகளின் தலைவர்கள் கள ஆய்வு என்ற பெயரில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்தி வருவதோடு, பூத் வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியகுமாரியில் தொடங்கி திருத்தணி வரையுள்ள 60000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அனைத்திற்கும் முகவர்களை நியமிக்கும் வலிமை கொண்ட இரண்டே கட்சிகள் திமுக, அதிமுக மட்டுமே. இவ்விரு கட்சிகளால் மட்டுமே கூட்டணிக்கு தலைமையேற்று கூட்டணிக்கட்சிகளுக்கும் சேர்த்து வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து தேர்தலை எதிர்கொள்ள முடியும். மேலும், இவ்விரு கட்சிக்காரர்களுக்கு மட்டுமே தங்கள் பகுதியிலுள்ள ஒவ்வொரு வாக்காளரையும் அடையாளம் தெரியும். இதுவே இவ்விரு கட்சிகளைத்தாண்டி மற்ற மாநிலங்களில் பரபரப்பாக பேசப்படும் "வாக்குத்திருட்டு" போன்ற மோசடிகளையோ, வாக்குப்பதிவு எண்ணிக்கையிலோ மோசடிகள் எதுவும் செய்யமுடியாது.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஆயிரம் உட்கட்சிப்பூசல்கள், வழக்குகள் அணிவகுத்தாலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி தலைமையில் நிர்வாகம், அரசியல் ரீதியான செயல்பாடுகளில் எவ்விதத் தொய்வுமின்றி செயல்பட்டு வருகிறது. "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் முதல் சுற்றுப்பயணம் செய்துவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளராகவுள்ள எடப்பாடியார் தனது முதற்கட்ட சுற்றுப்பயணைத்தை முடித்து இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அமைப்பு ரீதியாக செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் வகையில் மாவட்ட அளவில் முன்னாள் அமைச்சர்களை பொறுப்பாளர்களை நியமித்து வாக்குச்சாவடிதோரும் முகவர்களை நியமிக்கவும், அவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனொருபகுதியாக தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.ஜி.மோகன் அவர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டத் தலைவராகவுள்ள மோகன், தென்காசி தெற்கு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் பாகம் கிளைக்கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சிகளை அளித்து, அவர்களுடைய பணிகளை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்கான திட்டங்களை அளித்து சட்டமன்றத் தேர்தலில் கழக வேட்பாளரை வெற்றிபெறச்செய்ய பங்காற்றிடுவார்.
கம்பளத்தார் சமுதாயத்தில் வளர்ந்துவரும் இளம் தலைவரான மோகன் அவர்களை தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கும், பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.இராஜு அவர்களுக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

