தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் முதல்வராக திரு.இராமசாமி நியமனம்!
கோவை கண்ணம்பாளையத்திலுள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் முதல்வராக சிவகாசியைச் சேர்ந்த திரு.கே.இராமசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சமுதாயத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,
கோவை கண்ணம்பாளையத்தில் இயங்கிவருவது கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்வி நிறுவனம். 2008 முதல் இயங்கிவரும் இப்பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற ஓரு நிறுவனமாகும். இக்கல்லூரியில் இயந்திரவியல் துறையின் டீனாக சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.கே.இராமசாமி பணியாற்றி வருகிறார். வெளிநாடுகளில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ள திரு.கே.இராமசாமி, தாய்நாடு திரும்பியவுடன் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக இணைந்துகொண்டார். கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரியில் துறைத்தலைவராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றி வந்த திரு.இராமசாமி அவர்களை முதல்வராகப் பதவி உயர்வு வழங்கி அக்கல்லூரி நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் அந்நிறுவனத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திரு.இராமசாமி அவர்கள் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும், கல்வியாளர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

