தமிழக முதல்வரின் வருகையை எதிர்பார்க்கும் இராஜகம்பளத்தார்!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவுதினம் நாளை (அக்'16) அனுசரிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மாவீரனுக்கு புகழஞ்சலி செலுத்தவுள்ள நிலையில், ஆளும்கட்சியான திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு கம்பளத்தார் மத்தியில் எழுந்துள்ளது. இதன் விவரம் வருமாறு,
இந்திய விடுதலைக்கு முதல்முழக்கமிட்டு, தூக்குக்கயிரை முத்தமிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவுநாள் நாளை (அக்'16) அனுசரிக்கப்படவுள்ளது.
அஇஅதிமுகவின் மூத்த தலைவர் கலாநிதி, ஒன்றியச் செயலாளர் கண்ணன், கவுன்சிலர் ஆர்.எஸ்.சரவணன் உள்ளிட்டோர்களின் சீரிய முயற்சியாலும், முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆதரவோடும், கடந்த இருவருடங்களுக்கு முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, கட்டபொம்மனாரின் தியாகத்தைப்போற்றி, பெருமை சேர்க்கும் வகையில், அதிமுக சார்பில் ஆண்டுதோறும் அன்னாரின் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளின்போது தலைமைக்கழக நிர்வாகிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்துவார்கள் என்ற நிலையாணையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார்கள். அதன்படி அக்கட்சியின் மூத்ததலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கடம்பூர் செ.ராஜு, கே.டி.இராஜேந்திரபாலாஜி மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர், நாளை காலை 10 மணியளவில் கயத்தாறு மணிமண்டபத்திலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தவுள்ளனர். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி க,பழனிச்சாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதேபோல், மறுமலர்ச்சி திமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்கள், கயத்தாரில் அமைந்துள்ள மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் முதல்வர் கலந்துகொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நாடுமுழுவதுமுள்ள 40 லட்சம் கம்பளத்தார்கள் மத்தியில் உள்ளது. இராஜகம்பள சமுதாய மக்களின் உணர்வை மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தும் விதமாக வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றக்கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், தமிழக முதல்வருக்கான வேலைப்பளு அதிகம் என்றபோதும், கம்பளத்தாரின் அரைநூற்றாண்டு கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வராகப் பதவியேற்றவுடன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைத்து தன் பொற்கரங்களால் திறந்துவைத்தவர் இன்றைய தமிழக முதல்வர். அதுபோல் 40 லட்சம் இராஜகம்பள சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாண்புமிகு தமிழக முதல்வர் நாளை (அக்'16) கிண்டி காந்தி மண்டப வளாகத்திலுள்ள மாவீரன் கட்டபொம்மனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
இராஜகம்பள சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புவோம்!.

