எடப்பாடியார், துரைவைகோ, நயினார் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மானரின் 226-வது நினைவுநாளையொட்டி அன்னாரின் திருவுருவப்படத்திற்கும், சிலைக்கும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன் விவரம் வருமாறு,
இந்திய விடுதலைக்கு முதல்முழக்கமிட்டு தூக்குகயிற்றுக்கு முத்தமிட்டு தன்னுயிர் துறந்து மக்கள் மனங்களில் சுதந்திரத்தீயை மூட்டியவர் மாவீரர் திலகம் வீரபாண்டிய கட்டபொம்மன். அன்னாரின் 226-வது நினைநாளான நேற்று தமிழக அரசு சார்பில் தலைநகர் சென்னையில் கிண்டி காந்திமண்டப வளாகத்திலுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தியது முத்தாய்ப்பாக அமைந்தது.

இதுதவிர, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கயத்தாறு கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்ற அறிவிப்பை இருதினங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், பசுமை வழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோல், யார், எந்தக்கட்சியினர் வந்தாலும் வராவிட்டாலும் மாவீரன் கட்டபொம்மனாரின் பிறந்தநாள், நினைவுநாட்களின்போது தவறாது ஆஜராகிவிடும் ஒரே அரசியல் கட்சித்தலைவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அவரது உடல்நிலை சரியில்ல்லாத தற்போதைய நிலையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ கயத்தாரிலுள்ள மாவீரன் சிலைக்கு மாலையிட்டு அன்னாரின் தியாகத்தையும், வீரத்தையும் ஓங்கி ஒலித்தார்.

இதுதவிர, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மாவீரனின் நினைவுநாளையொட்டி சமூக வலைதளங்களின் புகழஞ்சலி பதிவுகளை பதிந்திருந்தனர்.
மேலும், மதுரை, கயத்தாறு, பாளையங்கோட்டை, வாசுதேவநல்லூர், கோவை ஈச்சனாரி, திருப்பூர் பாரப்பாளையம், ஊத்துக்குழி ஆர்.எஸ், சத்தியமங்கலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளையொட்டி இராஜகம்பள சமுதாய மக்கள் திரளாக ஒன்று திரண்டு மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

