திமுக முக்கிய பொறுப்புகளில் இரு இளைஞர்கள் நியமனம்!
கோவை மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தில் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முக்கியப் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். இதன் விவரம் வருமாறு,
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகிறது. அரசியல் கட்சிகளின் நகர்வுகள் அனைத்தும் சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தியே உள்ளன. கட்சிகளின் கூட்டணிக்கணக்குகள் எதுவாக இருந்தாலும், உட்கட்சி மட்டத்தில் பல மாற்றங்களைச் செய்துவருகின்றன. தற்போதெல்லாம் பிரதான அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிப்பது என்பது பள்ளிக் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை செய்வதுபோல் செய்ய வேண்டியிருப்பதாக கட்சியினரின் புலம்பல் சத்தம் கேட்கமுடிகிறது. வேலை செய்ய முடியாதவர்கள் பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள், மூத்த தலைவர்கள் என்ற மரியாதை எப்போதும் உங்களுக்கு உண்டு என்பதே தலைமையின் ஒற்றைச்சொல். முன்பு கட்சியின் பிரதான அமைப்பில் இருப்பவர்களே கட்சியின் முகங்கள், அவர்களுக்கே வேலையும், மரியாதையும் என்ற நிலைமாறி, ஒவ்வொரு அணி நிர்வாகிகளுக்கும் அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. இது ஒருபுறம் அதிகாரப்பரவலுக்கு வழிவகை செய்யும் அதேவேளையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்பு வழங்குவதோடு, பெரும்பாலான மக்களை அரசியல் மையப்படுத்துகிறது.
அரசியலில் புதிதாக பேசப்படும் சோசியல் இஞ்சினியரிங்கில் இவ்வாறான அதிகாரப் பரவலாக்கல் முக்கியப் பங்காற்றுகிறது. வடமாநிலங்களில் பாஜக செய்துவந்த இம்மாதிரியான அரசியல் நடவடிக்கைகளை இன்று பிரதான கட்சிகள் அனைத்தும் பின்பற்றத் தொடங்கிவிட்டன. அந்தவகையில் ஒவ்வொரு கட்சியிலும் பல அணிகள் உருவாக்கப்பட்டு, அதில் அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருப்பதை கட்சிகள் உறுதிபடுத்தி வருகின்றன. இதனால் அரசியலில் பெருஞ்சாதியினருக்கே வாய்ப்பு என்ற நிலை மாறி, எண்ணிக்கை அடிப்படையில் குறைந்த சமூகத்தினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வாய்ப்புகள் மூலம் நமது இராஜகம்பள சமுதாய இளைஞர்களும் வாய்ப்புப்பெற்று வருவது அரசியலில் கம்பளத்தார் சமூகம் நீடித்து நிலைபெறுவதை உறுதி செய்கிறது. இது வருங்காலங்களில் நமக்கென ஒரு அரசியல் ஆளுமை உருவாக்கும்.
அந்தவகையில் ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தில் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அக்கட்சியில் பிர்தான அணிகளில் ஒன்றான மாணவரணியில் அமைப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கோவை ஈச்சனாரியைச் சேர்ந்த ஜீவன் பிரசாத், சக்திவேல். கோவை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளரான திரு.சக்திவேல் அவர்களின் மகனான ஜீவன் பிரசாத் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குறிச்சி தெற்கு பகுதி மாணவரணி அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் குறிச்சி தெற்கு பகுதி பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ப.மகேந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் வெளியாகியுள்ளது.
இளந்தலைமுறை அரசியல்வாதிகளாக களமிறங்கும் ஜீவன் பிரசாத், மகேந்திரன் உள்ளிட்டோர் அரசியலில் பல உயரங்களைத் தொட வாழ்த்துவோம்.

