பா.ஜ.க. மாவட்டச் செயலாளராக டி.வடிவேல் நியமனம்!
பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்டச் செயலாளராக ஈச்சனாரியைச் சேர்ந்த டி.வடிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (S.I.R) தமிழக உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், இறந்துபோனவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரை நீக்குதல் போன்ற பல பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. இதில் எந்தக்குளறுபடியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அனைத்துக்கட்சிகளும் திவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் வாக்குச்சாவடி வாரியாக பலமான கட்டமைப்பு தேவை. இதுபோன்ற ஒவ்வொரு பணிக்கும் கட்சிக்கு ஆட்கள் தேவை. அதற்காக கட்சிக்குள் பல்வேறு அமைப்புகளைத் தோற்றுவித்து, வேலைகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதுதவிர மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகாணுவதற்காக பாரதிய ஜனதா கட்சியில் பிரத்யோகமான துணை அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அதுபோன்ற ஓர் அமைப்புதான அரசு தொடர்புப்பிரிவு. இது மாநில அளவில் இயங்கும் ஓர் அமைப்பாகும்.
தற்போது கட்சியில் மறுசீரமைப்பு செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியில் கோவை தெற்கு மாவட்ட அரசுத் தொடர்புப் பிரிவு மாவட்டச் செயலாளராக ஈச்சனாரியைச் சேர்ந்த டி.வடிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு அக்கட்சியில் சக்தி கேந்திர பொறுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுத் தொடர்பு பிரிவு மாவட்டச் செயலாளராக வடிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் மற்றும் சமுதாயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

