கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் வாடகை செலுத்துவது கட்டாயம்!
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, ஒருவர் தான் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு வாடகை செலுத்தாமல் இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. கோவையில் ஒரு வணிகக்கிடங்கு சம்மந்தமான வழக்கில் இவ்வாறு அதிரடித்தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இதன் விவரம் வருமாறு,
கோவையில் வணிக நிறுவனமொன்றுக்கு வாடகைக்கு விட்டிருந்த வீட்டு உரிமையாளர் வாடைகையை ரூ 48 ஆயிரமாக உயர்த்திக்கேட்க, வாடகை எடுத்தவர் 33 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் வாடகை கட்டுப்பாட்டு அதிகாரியிடம் சென்றுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டவர், பிப்ரவரி 2005 முதல் அமலுக்கு வரும் வகையில், பழைய வாடகை பாக்கியையும் சேர்த்து மாதத்திற்கு ரூ. 2.43 லட்சம் நியாயமான வாடகையாக நிர்ணயித்தார்.
வடகைக்கட்டுப்பாட்டு அதிகாரியின் உத்தரவை எதிர்த்து வாடகைதாரர் உடனடியாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும் வாடகைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக தடை கோரவில்லை. மேலும், மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தபோதும், நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை மட்டுமே வாடகைதாரர் தொடர்ந்து செலுத்தினார்.
மேல்முறையீட்டு அதிகாரியும், பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் வீட்டு உரிமையாளர் நிர்ணயித்த வாடகையில் சில மாற்றங்களுடன் உறுதிப்படுத்தியது. இருந்தபோதும், பல ஆண்டுகளாகக் குவிந்திருந்த பெரும் தொகையை வாடகைதாரர் செலுத்தத் தவறினார்.
2012-ல் உச்சநீதிமன்றம் வாடகைதாரரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த பின்னரும் கூட 2013-க்குள் செலுத்தப்படாத வாடகை ரூ.1.22 கோடியைத் தாண்டியது.
இதனையடுத்து, வேண்டுமென்றே செய்த தவறு என்ற அடிப்படையில் நில உரிமையாளர் வாடகைதாரரை வெளியேற்றக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆரம்பத்தில் வாடகை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியேற்ற மனுவை நிராகரித்தாலும், மேல்முறையீட்டு அதிகாரி 2020-ல் அதைத் தள்ளுபடி செய்தார். பின்னர், 2021-ல் சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு அதிகாரியின் முடிவை உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து வாடகைதாரரின் சட்டப்பூர்வ வாரிசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வாடகைத் தொகை குறித்து வாடகைதாரருக்கு எந்தவொரு உண்மையான குழப்பமும் இல்லை என்பதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வெளியேற்ற உத்தரவை உறுதிப்படுத்தியது. ஒருவர் மேல்முறையீடு செய்து, தடை கோராதபோது, உத்தரவைச் செயல்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்று பொருள் என நீதிமன்றம் கூறியது. ஆகவே, வாடகைதாரர் நியாயமான வாடகையை நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து செலுத்தக் கடமைப்பட்டவர். நிலுவையிலுள்ள வழக்கை, கட்டணங்களை தாமதப்படுத்த ஒரு காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று அமர்வு குறிப்பிட்டது. நீங்கள் வழக்கு தொடுத்தாலும், இடையில் வாடகை கட்டியே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் வாடகையை நிர்ணயித்த பிறகு, உயர்நீதிமன்றம் உத்தரவை நிறுத்திவைக்கும் வரை அந்தத்தொகை செலுத்தப்பட வேண்டும். பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல், வாடகைதாரர் நில உரிமையாளரை கொடுமைப்படுத்தி உள்ளார். இந்தக் கருத்துக்களுடன், உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததுடன், வெளியேற்ற உத்தரவையும் உறுதிப்படுத்தியது. வாடகைதாரர் நீண்ட காலமாகப் பணம் செலுத்தாததை வேண்டுமென்றே செய்த தவறு என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

