இந்தியப் பிரதம அமைச்சர் மோடியுடன் உரையாடிய இராஜகம்பளத்துப் பெண்மணி!
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்கவந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் கோவைச் சேர்ந்த இராஜகம்பள சமுதாயப்பெண்மணியும் இயற்கை விவசாய ஆர்வலருமான திருமதி.சுமலதா உரையாடும் வாய்ப்பைப்பெற்றார். இதன் விவரம் வருமாறு,
நீடித்த, சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசயானம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை முன்னிறுத்தி இயற்கை வேளாண் மாநாடு கோவை கொடீசியா அரங்கில் நடைபெற்றது.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் மூன்றுநாட்கள் நடைபெறும் இம்மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக கடந்த 19-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்திருந்தார். இம்மாநாட்டையொட்டி இயற்கை விவசாயம் சார்ந்த 17 அரங்குகளை பிரதமர் திறந்து வைத்தார். அதில் திருப்பூரைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலரும், நமது இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணியுமான திருமதி.சுமலதா இருந்த அரங்கிற்குச் சென்ற பிரதமர் அங்கு வைக்கப்பட்டிருந்த வேளாண் பொருட்கள் குறித்து சுமலதாவிடம் கேட்டறிந்தார்.
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க மகளிரணி பொறுப்பாளரான திருமதி. நஞ்சாத்தாள் அவர்களின் மகளான சுமலதா, பிரதமருடனான சந்திப்பு குறித்துப்பேசுகையில் "மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைத் திறந்துவைத்த பிரதமர், ஒவ்வொரு அரங்காகப் பார்வையிட்டுக்கொண்டே வந்தார். என்னுடைய அரங்கருகே வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தார். சற்றும் எதிர்பாராமல் நடைபெற்ற இந்த உரையாடல் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று" என்றார்.

