🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலக வல்லரசின் பயம் உள்ளங்கையில் உலைகைக் கொண்டுவந்தது!

ஒரு வல்லரசு நாட்டின் பயம் உலகின் போக்கையே மாற்றிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? இந்தப்பதிவின் முடிவில் உங்களுக்கே புரியும்...

1. 1957ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ரஷ்யா விண்ணில் ஏவியது. இது அமெரிக்க அரசாங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அறிவியல் துறையிலும், ராணுவத் துறையிலும் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதற்காக ஆர்பா (ARPA) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்நிறுவனம் வான்வழியாக அமெரிக்க ராணுவ மையங்களின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் ராணுவ மையம் தாக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் எதிர்த் தாக்குதல் கொடுக்க அந்த தகவல்கள் மற்ற ராணுவ மையங்களுக்கு தேவைப்படும். எனவே ராணுவ மையங்களுக்கு இடையே ஒரு தொடர்பு வலையை ஏற்படுத்தி அதில் தகவல்களைப் போட்டு வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

சோதனை முயற்சியாக 1969 அக்டோபர் மாதம் இரண்டு கல்வி நிறுவனங்களில் இருக்கும் கணினிகள் தொடர்பு வலை மூலம் இணைக்கப்பட்டன. படிப்படியாக இந்த ஆராய்ச்சி முன்னேற்றமடைந்து, அமெரிக்க ராணுவ மையங்களுக்கிடையே ஒரு முழுமையான தொடர்பு வலை ஏற்படுத்தப்பட்டது. 1990ல் வட அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தொடர்பு வலைக்குள் கொண்டு வரப்பட்டன. இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. 1990களுக்குப் பின் ஏற்பட்ட கணினித் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சிக்குப் பின், இணையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தன்னிச்சையான அமைப்புகளிடன் அமெரிக்க அரசு வழங்கியது. இதற்குப் பிறகுதான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இணையமும், இணையதளங்களும் உருவாயின.

2. 1970ம் ஆண்டு ரே டாம்லின்சன் என்பவர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுதான் மின்னஞ்சல் அனுப்பப் பயன்படும் மென்பொருளை முதன் முதலில் தயாரித்தது.

3. 1988ல் ஜார்க்கோ ஓகரினென் என்ற பின்லாந்துக்காரர் IRC எனப்படும் மின் அரட்டை (Chat) மென்பொருளைத் தயாரித்திருக்காவிட்டால், ‘காதலர் தினம்’ படத்தைப் பார்க்கும் துன்பத்திலிருந்து பெரும்பான்மையான தமிழர்கள் தப்பித்து இருப்பார்கள்.

4. இன்றைய கணக்குப்படி 120 கோடி (120,00,00,000) இணைய தளங்கள் உள்ளன. இவற்றில் 15 முதல் 20 சதவீதம் வரைதான் செயல்படுவதாக நம்பப்படுகிறது.

5. 100 அமெரிக்கர்களில் 95-96 பேர் இணையத்தைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இந்த விகிதம் ஜப்பானில் 100க்கு 88 ஆகவும், ஜெர்மனியில் 100க்கு 93 ஆகவும் உள்ளது. சீனாவில் 100க்கு 78 ஆகவும், இந்தியாவில் 100க்கு 55 ஆகவும் உள்ளது.

6. உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் இணைய தளமாக Google (105 பில்லியன்), அதற்கு அடுத்தபடியாக YouTube.com,Facebook.com, Instagram.com இணைய தளங்களும் உள்ளன.

7. 1994ல் e-shopping என்று அழைக்கப்படும், இணையம் மூலம் பொருட்களை வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், பெண்களை விட ஆண்கள் தான் இணையம் மூலமாக அதிகம் பொருட்களை வாங்குகிறார்கள். ஆண்கள் கணினி, இசை குறுந்தகடுகள் ஆகியவற்றையும், பெண்கள் துணிகளையும அதிகளவு வாங்குகிறார்கள்.

8. அதே ஆண்டு அக்டோபரில் தான் இணைய தளங்களில் விளம்பரம் செய்வதும் அறிமுகமானது. முதல் விளம்பரம் hotwired.com என்ற இணையதளத்தில் இடம்பெற்றது. 1997ல் 400 மில்லியன் டாலர்கள் இணைய விளம்பரங்களில் முதலீடு செய்யப்பட்டது. 2000ல் அது 4.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

9. 1995 செப்டம்பர் மாதம் வரை domain name என்றழைக்கப்படும் இணையதள முகவரிகள் பெறுவது இலவசமாகவே இருந்தது. கட்டண சேவை முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, domain name விற்பனை என்பது பரபரப்பான வியாபாரமாகி விட்டது. முக்கியமான நிறுவனங்களின் பெயர்களின் இணையதள முகவரிகளை முன்பதிவு செய்து கொண்டு, அந்த நிறுனங்களிடம் பேரம் பேசுவது அதிகமானது. 1997ல் business.com என்ற இணையதள முகவரி 150,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

எப்படியோ உலக வல்லரசு நாட்டின் பயம் உலகையே நம் உள்ளங்கையில் கொண்டுவந்து சேர்த்துள்ளது மகிழ்ச்சி தான்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved