இராஜகம்பள சமுதாய நலச்சங்கச் செயலாளர் ரோட்டரி கிளப் தலைவராகத் தேர்வு!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவராக இராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கச் செயலாளர் ஆர்.கண்ணன் அவர்கள் தேர்வு செய்யப்படுள்ளார். திரு.கண்ணன் அவர்களின் ரோட்டரி சங்கப்பணிகள் சிறக்க சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
விருதுநகர் மாவட்டம், பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.கண்ணன். இவரது துணைவியார் கே.சுமதி BA.,B.Ed., அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதிகளுக்கு ரஞ்சிதா M.A.,B.Ed, அஸ்விதா M.Sc., என்ற இருமகள்களும், கே.சத்தியராஜ் B.Lit, D.T.Ed., (ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்) என்ற மகனும் உள்ளனர். அருப்புக்கோட்டை நகரில் குடும்பத்துடன் வசிக்கும் கண்ணன், ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எளிமையான குடும்பப் பின்னனியோடு கடின உழைப்பால் முன்னேறியுள்ள திரு.கண்ணன், சிறந்த சமுதாயப்பற்றாளர் மட்டுமல்ல, தன்னை நாடி வரும் சமுதாய இயக்கங்களுக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளைச் செய்பவர். இளையோர் மற்றும் சமுதாயப் பெரியவர்களுடன் இணைந்து அருப்புக்கோட்டை இராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கம் தொடங்கியதில் முக்கியப் பங்காற்றிய திரு.கண்ணன், தற்போது அச்சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் சார்ந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல பொதுச்சமூகத்திற்கும் பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை கொண்டவரான திரு.கண்ணன், 20 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரோட்டரி கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை-யில் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக சமூக சேவையாற்றிவந்தார். இந்நிலையில், தற்போது அதன் தலைவராகத் (2026-2027) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த ரோட்டரி கிளப்பின் தலைமைப் பொறுப்பில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலரும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமைமிகு ரோட்டரி கிளப் ஆப் அருப்புக்கோட்டை-யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கண்ணனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர் செ.இராதகிருஷ்ணன், கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வை.மலைராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

