அதிமுகவில் தொடங்கியது நேர்காணல் - கம்பளத்தாருக்கு வாய்ப்பு கிட்டுமா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்பமனு பெற்று முடிந்து, விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணலைத் தொடங்கியுள்ளது. இதன் விவரம் வருமாறு,

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த டிசம்பர் 15 முதல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது. இதனையடுத்து பத்துநாட்கள் நடைபெற்ற விருப்பமனு விநியோகத்தின்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கட்சித்தலைமையகத்திற்கு படையெடுத்தனர். ஏறக்குறைய 9500 விருப்பமனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதிமுக தலைமையிலான அணியில் பிறகட்சிகளைச் சேர்ப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை சூடுபிடிக்கத்தொடங்கியது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக கட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக-வும் இணைந்துள்ளது. இக்கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணலை இன்று தொடங்கியுள்ளது அதிமுக. அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நேர்காணலில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைக்கழக நிர்வாகிகள் முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் விருப்பமனு அளித்தவர்களிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நேர்காணல் தொடங்கிய முதல்நாளான இன்று அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த கோ.கலையரசன் பங்கேற்று தனது விவரங்களைக் கட்சித்தலைமையிடம் வழங்கினார். அதேபோல் பிறமாவட்டங்களிலிருந்து விருப்பமனு அளித்திருந்த இராஜகம்பள சமுதாயப் பிரமுகர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் நேர்காணலில் கலந்துகொள்ள சென்னைக்கு வருகைதர உள்ளனர்.

