🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிப்ரவரி முதல்நாளில் கட்டபொம்மனாரின் மணிமண்டபத் திறப்புவிழா!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள மாவீரர் திலகம் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் முழுவுருவ வெண்கலச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்புவிழா 2026-பிப்ரவரி'01 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இதன் விவரம் வருமாறு,

இராஜகம்பள சமுதாய மக்கள் அடர்த்தியாக வாழும் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதன்மையானது.  இச்சமுதாயத்தில் பிறந்து இந்திய விடுதலைக்கு முதல்முழக்கமெழுப்பி தூக்குக்கயிறை முத்தமிட்டு, இந்திய வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன். அம்மாவீரனின் தியாகத்தைப்போற்றும் வகையில், தங்கள் வாழும்பகுதியில் அன்னாரின் முழுவுருவச்சிலை நிறுவப்பட வேண்டும் என்பது அப்பகுதி இராஜகம்பள சமுதாய மக்களின் விருப்பம். ஏறக்குறைய கால்நூற்றாண்டுக்கு முன்பு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மேனாள் தலைவர் அமரர்.வையப்ப நாயக்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அன்றைய அமைச்சர் பெருமக்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் மக்களின் விருப்பத்தை சமுதாயத் தலைவர்கள் வேண்டுகோளாக முன்வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.  சமுதாய மக்கள் விரும்புமிடத்தை தேர்வு செய்து கொடுத்தால், தனது சொந்த செலவில் சிலை அமைத்துத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மாதிரி சிலை மற்றும் சிற்பி அடையாளங்காணப்பட்டு முன்பணமும் வழங்கி இருந்தார். ஆனால் இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக மக்களின் விருப்பமும், அமைச்சர் கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றுவதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது.


இவ்விவகாரம் ஒவ்வொரு தேர்தலின்போதும் சமுதாய மக்களிடையே பேசுபொருளாக இருந்துவந்தபோதும், அதைமுன்னின்று எடுத்துச்செய்வதற்கு யாரும் முன்வராத நிலையில், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்ற ஐயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக கடந்த ஆண்டு சமுதாயப்பெரியோர்களின் சீரிய முயற்சியால்,  கொடையுள்ளம் கொண்ட கம்பளத்தார்கள் சிலை அமைப்பதற்காக நிலத்தை தானம் செய்ய முன்வந்தனர். எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு, அமைச்சரின் ஆலோசனைப்படி, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல்குடி அருகேயுள்ள உடையநாதபுரம் விலக்கு கிராமத்திலுள்ள இடத்தைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து சிலை அமைப்பது உறுதியானது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் முழுஒத்துழைப்பால் சிலை அமைப்பதற்கான அரசின் அனுமதி விரைவில் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து மணிமண்டம் கட்டும்பணி அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது. 

இதன் தொடர்சியாக விருதுநகர் மாவட்ட இராஜகம்பள சமுதாய மக்கள் தாமாக முன்வந்து மணிமண்டபப்பணிக்காக நன்கொடையை அள்ளிக்கொடுத்தனர். இதன்பலனாக மணிமண்டபப்பணிகள் குறித்தகாலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மணிமண்டபம் திறப்புவிழாக்காணவுள்ளது. கால்நூற்றுண்டு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மாவீரன் கட்டபொம்மனாரின் முழுவுருவ வெண்கலச் சிலையை வழங்கி, மணிமண்டபத்தை திறந்துவைக்கவுள்ளார்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன். திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகளைப் போர்க்கால அடிப்படையில் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துவருகின்றனர். திறப்புவிழாவைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறவுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved