🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விழாக்கோலம் பூண்ட விருதுநகர் - களைகட்டும் சிலை திறப்புவிழா!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள மாவீரர் திலகம் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் முழுத்திவுருவ வெண்கலச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்புவிழா நாளை (01.02.2026, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இராஜகம்பள சமுதாய மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டுமென்று சமுதாயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல்குடி அருகேயுள்ள உடையநாதபுரம் விலக்கில் நிறுவப்பட்டுள்ள பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவ வெண்கலச்சிலை மற்றும் மணிமண்டபம், கட்டபொம்மனாரின் இஷ்ட தெய்வமான திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு உகந்த பக்தித்திருநாளாம் தைப்பூச தினத்தன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட கம்பளத்தார் இல்லங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.


விருதுநகர் மாவட்ட கம்பளத்தார்களின் கால்நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றும் விதமாக, தமிழக வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், நாளை (01.02.2026) காலை 9.30 மணியளவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு, கட்டபொம்மனாரின் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்து, மணிமண்டபத்தை சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்நிலையில், சிலைத் திறப்புவிழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி, ஹரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இராஜகம்பள சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், சிலைத் திறப்புவிழாவை முன்னிட்டு இன்று (31.01.2026) இரவு முதலே விருதுநகர், அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம், புதூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இராஜகம்பள சமுதாயப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன், மேளதாளம் முழங்க முளைப்பாரி எடுத்து வரவுள்ளனர்.


திறப்புவிழாவுக்குப்பின் காலைமுதலே அன்னதானம் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். இந்நிலையில், திறப்பு விழா நிகழ்வு சிறப்புடன் நடைபெறவும், கம்பளத்தார் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையவும், ஒட்டுமொத்த இராஜகம்பள சமுதாய மக்களின் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் பெருந்திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டுமாய் சமுதாய ஆர்வலர்கள் பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved