🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இரயில்வே மேம்பாலத்திற்கு கட்டபொம்மன் பெயர் சூட்டிய தமிழக முதல்வர்!

ரூபாய் 38 கோடியே 81 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்திற்கு இந்திய சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்டு இன்னுயிர் நீத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பெயரைச் சூட்டிய தமிழக முதல்வர். 40 லட்சம் இராஜகம்பள சமுதாய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வருக்கு சமுதாயத்தின் சார்பில் கோடானுகோடி நன்றி. இதுபற்றிய முழுவிவரம் வருமாறு,

மதுரை திருமங்கலம் - விமான நிலையம் சாலை வழியாக திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில்நிலையங்கள் அமைந்துள்ளது. இந்த இரு இரயில் நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள இரயில்வே கேட் (எண்.377) தினமும் 50க்கும் மேற்பட்ட முறை மூடப்படுவதால், திருமங்கலம் - விமான நிலையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே, இந்த இரயில்வே கேட்டிற்கு மாற்றாக மேம்பாலம் அமைக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் 25 ஆண்டுகாலக் கோரிக்கை.


2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருமங்கலம் தேவர் சிலை அருகிலிருந்து காமராஜபுரம் வேளாண்மை விரிவாக்க மையம் வரை மேம்பாலம் அமைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ரூ 33 கோடி மதிப்பீட்டில் 2023 இல் தொடங்கிய மேம்பால கட்டுமானப்பணிகள் கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்தது. தற்போது 38 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுபெற்றதையடுத்து கடந்த 21.02.2026 அன்று காணொலி வாயிலாக தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

இதுகுறித்து தனது சமூகவலைதளப்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவிற்கு மாற்றாக 38 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள "வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம்" திறந்து வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.


மதுரை திருமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாவீரன் கட்டபொம்மன் சிலை, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின்போது அகற்றப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக நிறுவப்படாமல் இருந்து வருகிறது. அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், மதுரை நகரின் பிரதான பகுதியில் பலகோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைச் சூட்டி அனைவரையும் நெகிழச் செய்துள்ளார் மாண்புமிகு தமிழக முதல்வர். கலைஞரின் வழியில், இச்சமூகம் கட்டபொம்மனாரின் தியாகத்தை என்றென்றும் நினைவு கூறும் வகையில், மிகமுக்கியமான சாலையில் நிறுவப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு அவரது பெயரைச்சூட்டியுள்ள தமிழக முதல்வருக்கு இராஜகம்பள சமுதாய மக்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பது நிச்சயம்.

மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும்  இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved