மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் தனபால் நியமனம்!
மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் (மத்திய சட்ட அதிகாரி) பொறுப்பில் வை.பெ.தனபால் M.A.,B.L., நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரத்துறையின் துணைச் செயலாளர் ராஜீவ் குமார் பிறப்பித்துள்ளார். இதன் முழுவிவரம் வருமாறு,
இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மேனாள் தலைவர் அமரர். வையப்ப நாயக்கர் அவர்களின் பெயரனும், பாஜக பிரமுகருமான வை.பெ.தனபால், மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மத்திய அரசு வழக்கறிஞராகவும், பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கோட்டப் பொறுப்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்திருந்தார். மேலும், இவர் தென்னக ரயில்வே மத்திய அரசு வழக்கறிஞராகவும் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நீரோட்டத்தில் கலந்து கட்சியின் நம்பிக்கையைப்பெற்று படிப்படியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டும், உயர்த்திக்கொண்டும் வரும் வழக்கறிஞர் வை.பெ.தனபால் மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

