பிரபல மோசடி மன்னன் துளசி ராமனைத் தட்டித் தூக்கிய காவல்துறைக்கு பாராட்டு!
பாஞ்சைப்பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 8 வது வாரிசு என்று பொய்சொல்லி அப்பாவி இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றி வந்த பிரபல மோசடி மன்னன் துளசி ராமன் காவல்துறையால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மிக நீண்ட நாட்களாக இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இராஜகம்பள சமுதாய மக்கள் பதறிவந்தநிலையில், மோசடிப்புகார் ஒன்றில் சென்னை ஐஸ் ஹவுஸ் போலீசார் துளசி ராமனை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை இராஜகம்பள சமுதாயத்தினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விவரம் வருமாறு,

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் துளசி ராமன். இவர் தனது உண்மையான பெயரை மறைத்து "இளைய கட்டபொம்மன்" என்ற பெயரில் சமூக வலைதளங்களில் கணக்குத் தொடங்கி கட்டபொம்மன் வம்சம் என அடையாளத்துடன் அறிமுகமானர். அவர் எதிர்பார்த்தது போலவே "கட்டபொம்மன்" பெயரைச் சொன்னவுடன் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் தங்களை மீட்க வந்த ரட்சகராக நினைத்துக்கொண்டு வலியச்சென்று துளசிராமனிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். அவரும் தானாக வந்து வலையில் சிக்கிய மீன்களை விட்டுவிடாமல், அரசியல் கனவில் மிதந்த இளைஞர்களுக்கு தீனிபோடும் விதமாக, "கட்டபொம்மன் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற லெட்டர் பேட் அமைப்பைத் தொடங்கி, ஒன்றிய அளவில் இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தினால் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா இரண்டு லட்சம் கொடுப்பதாக அறிவித்தார்.
அப்புறம் என்ன? தீயாய் வேலைசெய்த நம் இளைஞர்கள் "இளையகட்டபொம்மன்" என்ற பெயரை தென்மாவட்ட கிராமங்களில் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தனர். அப்போதே துளசிராமனுக்காக வரிந்துகட்டி வேலைசெய்தவர்களை சென்னையில் வசிக்கும் உறவுகல் பலர் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல் 2020-21 காலகட்டங்களிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.

இராஜகம்பள இளைஞர்களுக்கு அறிமுகமாகிய சில மாதங்களிலேயே தன் கைவரிசை காட்டத்தொடங்கிய துளசி ராமன், ஒன்றியத்திற்கு இரண்டு லட்சம் கொடுப்பதாகச் சொன்னதுபோய் "அரசு வேலை" வாங்கித் தருவதாக நூல் விட்டுள்ளார். அரசியல் ஆசையில் வந்தவர்கள் "ஏஜெண்ட்"களாக மாறிப்போய் அரசு வேலைக்கு முயற்சி செய்யும் அக்கம்பக்கது சொந்தங்களிடமிருந்து பல லட்சங்களை வசூல் செய்து 'சமத்தாக" சென்னை வந்து செட்டில் செய்துவிட்டுச் சென்றார்கள்.
எந்த ஆதாரமுமின்றி காதும் காதும் வைத்தாற்போல் பல லட்சங்களை துளசி ராமனுக்கு "மொய்" வைத்துவிட்டு அரசு வேலை எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து ஏமாந்ததுதான் தான் மிச்சம். அப்புறமென்ன, சமூக வலைதளங்களில் இளையகட்டபொம்மன் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஏமாந்தவர்கள் "திட்டித் தீர்ப்பதுதான் மிச்சம்".

கம்பளத்தாரிடம் கைவரிசைகாட்டி ருசி கண்டவருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டது வரப்பிரசாதமாக அமைந்தது. தன்னை திமுகவின் முக்கியப்பிரமுகராகவும், துணை முதல்வரின் தீவிர விசுவாசியாகவும் சமூக வலைதளங்களில் காட்டிக்கொண்டார். மேலும், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் விழாக்களுக்கு வலியச்சென்று கட்டபொம்மன் வாரிசு என்று அறிமுகப்படுத்திக்கொள்வார். அதற்கேற்ப அவரது தோற்றமும் ஒத்துழைப்பதால் முக்கியப் பிரமுகர்களோடு முன்வரிசையில் அமர்வது, மிகநெருங்கிய நண்பர் போல காட்டிக்கொள்வது, இணக்கமாகப் பேசுவது போல நடிப்பது என விதவிதமான ரகங்களில் போட்டோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவது வாடிக்கை. இதையெல்லாம் உண்மை என நம்பியவர்களில் கம்பளத்து இளைஞர்கள் மட்டுமல்ல பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் எனப்பட்டியல் நீளும்.
"இந்தப் பூனைக்கு யார் மணிகட்டுவது; எப்படிக் கட்டுவது" என சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் பலரும் தவித்து வந்தவேளையில், சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக விருப்பமனு விநியோகத்தின்போது தன்னை "கட்டபொம்மனாரின் 8-வது வாரிசு" என கூறிக்கொண்டு திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டியும், தனக்காகவும் விருப்பமனு அளித்தார். தமிழக முதல்வர் நடத்திய நேர்காணலிலும் பங்கேற்று போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் "நானும் ரௌடி தான்" என்பதை நிலைநிறுத்திக்கொண்டே வந்தார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கட்டபொம்மனாரின் நேரடி வாரிசுகள் மூலம் "துளசி ராமன்" மீது புகாரளிக்க அமைப்புகள் ஆயத்தமாகிக்கொண்டிருந்த வேளையில் முந்திக்கொண்ட தமிழக காவல்துறை "துளசி ராமனை" பணமோசடி வழக்கில் நேற்று கைதுசெய்து சிறையில் தள்ளியுள்ளது. கம்பளத்தாரிடம் கையாண்ட அதேபாணியில் எனக்கு அமைச்சர்களைத் தெரியும், அவரைத் தெரியும், இவரைத்தெரியும் என்று கூறி அரசு வேலை, கடை வைக்க லைசென்ஸ் வாங்கித்தருவதாக பெண்கள் உள்ளிட்ட பலரிடம் பல லட்சங்களை துளசி ராமன் 'அபேஸ்" செய்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துளசி ராமனை திமுக தலைவர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனவும், கட்டபொம்மன் வாரிசு என்று நம்பி எந்தவிதமான பொது அமைப்புகளும் அவரை நிகழ்ச்சிக்கு அழைக்கக் கூடாது என்றும் இராஜகம்பள சமுதாய அமைப்புகளும், கட்டபொம்மனாரின் நேரடி வாரிசுகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

