தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் சந்திப்பு!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த திரு.பொன்.காசிராம்-க்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு அக்கட்சியின் முன்னனித் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதன் விவரம் வருமாறு,

17-வது தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இம்மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இராஜகம்பள சமுதாயத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென த.வீ.க.பண்பாட்டுக் கழகம், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் திமுக, அதிமுக கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தின. ஆனால் சமுதாய அமைப்புகளின் கோரிக்கையைப் புறந்தள்ளியுள்ள அவ்விரு கட்சிகளும் வழக்கம்போல் சாதி பெரும்பான்மையினருக்கும், பெரும் பண முதலைகளுக்கும் "சீட்" விநியோகம் செய்துள்ளன.

தமிழக தேர்தல் களம் பணம் மற்றும் சாதியை வைத்தே ஆளும், ஆண்ட கட்சிகள் கட்டமைத்துள்ள நிலையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சாதி, மொழி சிறுபான்மையினர் பலருக்கும் "சீட்" வழங்கியுள்ளது. அந்தவகையில் முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம் விளாத்திக்குளம் தொகுதியில் அக்கட்சியின் வடகிழக்கு மாவட்டக் கழக இணைச்செயலாளரும், இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்தவருமான "பொன்.காசிராம்"-க்கு டிக்கெட் வழங்கியுள்ளது.

இருபெரும் திராவிடக்கட்சிகள் கம்பளத்தாரின் அரசியல் கோரிக்கையை நிராகரித்துவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 'சீட்' கொடுத்து அரவணைத்துக்கொண்டது பலத்த வரவேற்பைப்பெற்றுள்ளது. இராஜகம்பள சமுதாய மக்களின் உணர்வுகளை தவெக தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் செந்தில்குமார் இராமராஜ், பெருமாள், முருகன் மற்றும் ஆறுமுகச்சாமி ஆகியோர் சென்னை அண்ணா சாலையிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் திரு.ஆதவ் அர்ஜுனா ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தெரிவித்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது இராஜகம்பளத்தார் சமூகம் தொடர்பான முழுவிபரங்களையும் ஆதவ் அர்ஜூனா சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தபோது அதைவாங்கி சங்க நிர்வாகிகளுக்கு அணிவித்து விளாத்திக்குளம் தொகுதி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது கம்பளத்தார்க்கு 'சீட்' வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கடிதம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விளாத்திக்குளம் தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்.காசிராம்-க்கு சங்க நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வெற்றிபெற வாழ்த்தினர். விளாத்திக்குளத்தில் 'விசில் பறக்கட்டும்'.

