2026 - 2028 கடும் வறட்சியை எதிர்கொள்ளத் தயாராவீர்!
எல் நினோ (El Nino) என்பது பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு இயல்பான வெப்பநிலையை விட அதிகமாகும் (வெப்பமடையும்) ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இது 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகி, பலவீனமான காற்று மற்றும் உலகளாவிய வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவில் வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை உண்டாக்கும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் உருவாக இருக்கும் 'சூப்பர் எல் நினோ' கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
'எல் நினோ' காலங்களில், பசிபிக் பெருங்கடலில் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் வெப்பநிலை, சராசரியை விட 1/2 டிகிரி முதல் 11/2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அதுவே வெப்பம் 3 டிகிரிவரை உயர்ந்தால் 'சூப்ப்ர் எல் நினோ' எனப்படுகிறது.
'எல் நினோ'வுக்கு எதிர்மறையாக குளிர்ந்த வெப்ப நிலையைக் கடல் கொண்டிருந்தால் அது 'லா நினோ' எனப்படும். இது நல்ல மழைப்பொழிவை தரக்கூடியது.
இந்த ஆண்டு உருவாகும் சூப்பர் எல் நினோ காரணமாக இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை குறைவாகவோ அல்லது சில இடங்களில் மழை பொய்த்துப்போவதற்கோ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் அபரிமிதமான மழை இருக்கலாம் என்றும் கணிக்கின்றனர். மேலும் 'சூப்பர் எல் நினோ' காரணமாக ஏற்படும் வறட்சியால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு 'காட்டுத் தீ' ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

'சூப்பர் எல் நினோ' குறித்து தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன்பே தெரியவந்துள்ளதால், தென்மேற்குப் பருவமழையால் அதிகம் பயன்பெரும் 'மேற்குத் தொடர்ச்சி மலை'யை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ஆண்டு பெய்யக்கூடிய மழை நீரை அதிக அளவில் சேமித்து வைக்க தேவையான நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்று விவசாயத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், மழைநீரை சேமிக்க பெரிய அளவிலான குளம், குட்டைகளை மட்டுமே நம்பியிராமல் ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தில் விழும் மழைநீரை கிணறு அல்லது ஆழ்துழாய் கிணறில் சேமித்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். தென்னை விவசாயிகள் உழவு ஓட்டுவதற்கு பதிலாக மழைநீர் வழிந்தோடாமல் 'வரப்பு/பொழி'களை சீரமைத்து விழுகின்ற மழைநீரை சேமித்து பூமிக்குள் 'ரீசார்ஜ்' செய்தால் வறட்சியை சமாளித்து தென்னை மரங்களையும், கால்நடைகளையும் காப்பாற்றுவதோடு, குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கலாம் என்று ஆலோசனை வழங்குகின்றனர்.
'சூப்பர் எல் நினோ' பாதிப்புகள் 2027 வரை நீடிக்கும் என்பதால் மே, ஜூன் மாதங்களில் தொடங்கவுள்ள தென்மேற்குப் பருவமழையை சேமிப்பதற்கான நடவடிக்கைகளில் விவசாயிகள் உடனடியாக ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

