விளாத்திக்குளத்தில் விசில் சத்தம் - மக்கள் மனங்களில் பொன்.காசிராம்!
சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. 17 வது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புபெற்ற ஒரே இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த தவெக வேட்பாளரான பொன்.காசிராமுக்கு விளாத்திக்குளம் தொகுதி மக்கள் தன்னெழுச்சியாக அளித்துவரும் வரவேற்பு வெற்றிவாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த பொன்.காசிராம் களமிறக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து தவெக தொண்டர்கள் புடைசூழ கடந்த 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பொன்.காசிராம் அன்றிலிருந்தே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் தவெக நிர்வாகிகளும், விளாத்திக்குளம் தெற்கு ஒன்றிய தவெக செயலாளரும், திரைப்பட நடிகருமான சின்னா-வும் பிரச்சாரத்தில் இணைந்து கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகின்றனர்.

தேர்தலை முதன்முறையாகச் சந்திக்கும் தவெகவினருக்கு மக்கள் தன்னெழுச்சியாக அளிக்கும் வரவேற்பு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. மற்ற கட்சிகளெல்லாம் கூட்டத்தைச் சேர்ப்பதற்கு பணத்தை வாரி இரைக்க வேண்டியுள்ள நிலையில், தவெக வேட்பாளரை வரவேற்க இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் வருவது மற்ற வேட்பாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தவெக தேர்தல் பணிமனைக்குப் படையெடுக்கும் இளைஞர்கள் தங்கள் கிராமத்திற்கு வேட்பாளர் ஏன் இன்னும் வரவில்லை என்று ஆர்வத்துடன் கேட்டுச்செல்வது பொன்.காசிராமுக்கு ஆதரவான சூழல் நிலவுவதைக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். மீதமுள்ள சிலநாட்களையும் தவெக வினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தால் பொன்.காசிராமின் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது என்பதே தற்போதைய களநிலவரம்.

