அதிக அளவில் கலப்புத் திருமணம் செய்யும் உயர்சாதியினர் மற்றும் பணக்காரர்கள்!
தெலங்கானா மாநிலத்தின் சாதி மற்றும் சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பு, மாநிலத்தில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே நிலவும் அசாதாரணமான ஏற்றத்தாழ்வுகளையும் பின்தங்கிய நிலையையும் கண்டறிந்துள்ளது. 'கூட்டுப் பின்தங்கிய நிலை குறியீடு' (Composite Backwardness Index) மதிப்பெண்களின் அடிப்படையில், பொதுப் பிரிவினரை விட எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) பிரிவினர் மூன்று மடங்கு அதிக பின்தங்கிய நிலையில் இருப்பதாகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப் பிரிவினரை விட 2.7 மடங்கு பின்தங்கியுள்ளனர்.
மாநில அளவிலான சராசரி 'கூட்டுப் பின்தங்கிய நிலை குறியீடு' மதிப்பெண் 81 என்று பிரபாகர் கூறினார். இந்தக் குறியீடு மதிப்பெண் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பின்தங்கிய நிலையும் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்தக் குறியீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள 135 சாதிகள் (மொத்த மக்கள் தொகையில் சுமார் 67 சதவீதம்) முன்பு நினைத்ததை விட அதிக பின்தங்கிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய பிரபாகர், எஸ்சி பிரிவைச் சேர்ந்த "தக்கல்" (Dakkal) சமூகம் 116 என்ற மிக உயர்ந்த பின்தங்கிய மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளதாகவும், "காப்பு" (Kapu) சமூகம் 12 என்ற மிகக் குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். "சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கவலையளிக்கின்றன," என்று அவர் கூறினார். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள சாதி குடும்பங்களில் 78 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆண்டுக்கு சுமார் ரூ. 1 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர், ஆனால் இதர சாதியினரில் (Other Castes) 13 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை வருமானம் ஈட்டுகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரில் வெறும் 2.1 சதவீதம் பேர் மட்டுமே ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுகின்றனர். மக்கள் தொகையில் 21.2 சதவீதத்தினருக்கு வீட்டில் குடிநீர் குழாய் வசதி இல்லை; 13.3 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை; மற்றும் 5.8 சதவீதத்தினருக்கு முறையான மின்சார இணைப்பு இல்லை என்பதையும் இந்தக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
மாநிலத்தில் எஸ்சி 'மாதிகா' (Madiga) சமூகமே மிகப்பெரிய சமூகமாகும், இது மக்கள் தொகையில் 10.3 சதவீதம் அல்லது 36.58 லட்சமாக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஷேக் முஸ்லிம் (பிசி-இ) 27.96 லட்சம் (7.9%), முதிராஜ் (ஓபிசி) 26.39 லட்சம் (7.4%) மற்றும் லம்பாடி/பஞ்சாரா (எஸ்டி) 24.04 லட்சம் (6.8%) உள்ளனர்.
தெலுங்கானா சாதி சர்வே முடிவுகளை பகுப்பாய்வு செய்த நீதியரசர் சுதர்சன் ரெட்டி தலைமையிலான வல்லுநர் குழு முக்கியமான புரிதல்களை வெளியிட்டிருக்கிறது.
ஐயர்/ஐயங்கார் சாதிகளில் கலப்புத் திருமணம், குழந்தைத் திருமணம் எப்படி இருக்கிறது?
எந்த சாதியிடம் நிலவுடைமை அதிகம் உள்ளது?
தமிழ்நாடு, நிச்சயமாக கவனத்தில் கொள்ளவேண்டிய, சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய, ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய பல முடிவுகள் அதில் உள்ளதாக அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுதர்சன ரெட்டி குழுவின் சில முக்கிய முடிவுகள் மட்டும் மிகச் சுருக்கமாக... .
ஐயர் / ஐயங்கார் குடும்பங்களில்தான் கலப்புத் திருமணம் அதிகம் நடந்திருக்கிறது. அடுத்தபடியாக அதிகம் கலப்புத் திருமணங்கள் நடப்பது ராஜ்புத் சாதியில். முதல் இடத்தில் பிராமணர்கள். இரண்டாவது இடத்தில் சத்திரியர்கள். மூன்றாவது இடத்தில் எஸ்.சி / பி.சி. கிறித்துவர்கள்.
எனில், சாதிக்கட்டமைப்பின் உச்சியில்தான் அது இலகுவாக மாறும் என்று இதைப் புரிந்துகொள்ளலாமா?
ஆனால், சாதிக் கட்டமைப்பில் மேலடுக்கில் இருக்கிற பிற சாதிகளிலும் இது நடந்திருக்க வேண்டும்தானே?
ஆனால், அப்படி நடக்கவில்லை.
பெரிய நிலவுடைமைச் சாதிகளான, ரெட்டி, வெலமா ஆகியவற்றில்தான் கலப்புத் திருமணங்கள் மிகக் குறைவு.
நகரமயமாதல், கல்வி, வெளியுலக அனுபவம் இவையே சாதி மறுப்புத் திருமணங்களில் பெரிய செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும் என்றும் அந்த பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
நகரமயமாதல், கல்வி, வெளியுலக அனுபவம் ஆகியவை ஒரு சமூகம் நிலக்கிழாரிய முறையில் இருந்து வெளியேறி முதலாளித்துவ சமூக முறையில் கலந்திருப்பதைக் காட்டுவதாகப் புரிந்துகொள்ளலாமா?
முதலாளித்துவ முறைக்கு வந்திருப்பதென்றால், முதலாளியாகி இருப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. முதலாளிகள், தொழிலாளிகள் இரண்டு வகுப்பாருமே, முதலாளித்துவ சமூகத்தில்தான் இருக்கிறார்கள்.
நிலக்கிழாரிய முறை என்றால் நிலக்கிழார்கள் மட்டுமல்ல... பண்ணை உழைப்பாளிகளும்தான். அதைத்தான் எஸ்.சி., பி.சி. கிறித்துவர்களின் பெயர்வு காட்டுகிறது.
ஆனால், பெரும் நிலவுடைமைச் சமூகங்களுக்கு தங்கள் பிற்போக்கு சமூக நிலைமையில் இருந்து வெளியேறுவதற்கான தேவை எழவில்லை. எனவே அங்கே கலப்புத் திருமணங்கள் குறைவு. இப்படிப் புரிந்துகொள்ளலாமா?
எனில், சமூகப் பழக்கவழக்கங்கள் மீது வருணாசிரமம் செலுத்திவந்த செல்வாக்கை முறியடிக்கும் ஆற்றல் முதலாளித்துவத்துக்கு உண்டு என்ற புரிதலை இது வலுவாக்குகிறது அல்லவா?.
தமிழ்நாட்டில், தொடக்கம் முதலே நகரமயமாதலை ஊக்குவித்துவந்த திராவிட இயக்க ஆட்சிகளின் அணுகுமுறை, சாதிக்கெதிரான பலனளிக்கும் அணுகுமுறை என்று கொள்ளலாமா?
இவையெல்லாம் விடைகள் அல்ல. ஆய்வுக்குரிய கேள்விகள்தான்.
இதற்கு முரண்பட்ட இன்னொன்றைப் பார்ப்போம்.
தெலுங்குச் சமூகம், குறிப்பாக தெலுங்கானா சமூகம் எவ்வளவு பிற்போக்கான சமூக நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு தரவு அது.
தெலுங்கானாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்திருப்பதை இந்த சர்வே காட்டுகிறது.
இப்படி குழந்தைத் திருமணம் செய்திருப்பதில் முதலிடத்தில் இருப்பதும் அதே ஐயர் / ஐயங்கார் சாதிகள்தான். 21 சதவீதத்துக்கும் மேல்.
ஐயர், ஐயங்கார் பெண்களில் 21 சதவீதமா அல்லது குழந்தைத் திருமணம் செய்திருப்போரில் 21 சதவீதமா என்ற தெளிவு இல்லை.
ஆனால், அதிகம்.
முந்தைய தரவை ஆய்வு செய்யும்போது பார்த்தோமே. நகரமயமாதல், கல்வி, வெளியுலக அனுபவம் ஆகியவையே குறிப்பிட்ட சாதிகளில் சாதி மறுப்புத் திருமணம் அதிகரிக்கக் காரணம் என்று. சாதி மறுப்புத் திருமணம் செய்யும் அளவுக்கு முற்போக்காக அவர்களை நகர்த்திய சமூகக் காரணிகள், குழந்தைத் திருமணம் செய்யும் அளவுக்கு அவர்களைப் பிற்போக்காக வைத்திருக்கும் காரணம் என்ன? குழப்பமாகத்தான் இருக்கிறது.
என்னவாக இருக்குமென்றால், ஒரு சாதி என்று சொல்லும்போது அந்த சாதியைச் சேர்ந்த மக்கள் தொகை முழுவதுமே ஒரே மாதிரி வளர்ச்சி நிலையை அடைவதில்லை. முன்னேறுவதில்லை. ஐயர் / ஐயங்கார் சாதிகளில் இருந்து வந்து நகரமயமாகி, கல்வி பெற்று, வெளியுலக அனுபவம் மிகுந்த, அல்லது முதலாளித்துவ உலகில் புகுந்த பிரிவினர் இடையே கலப்புத் திருமணம் மிகுந்திருக்க வேண்டும்.
அந்த சாதிக்குள்ளேயே, இன்னும் முன்னேறாத, நிலக்கிழாரிய வாழ்க்கை நிலையிலேயே இருக்கிற, பூசாரித் தொழில் புரிகிற, ஊரக வாழ்வில் இருந்து வெளியேறாத பிரிவினரில் குழந்தைத் திருமணம் மிகுந்திருக்கலாம்.
வேறு விதமாகவும் இருக்கலாம்.
சர்வே பகுப்பாய்வில் இருந்து கிடைக்கிற இன்னொரு முக்கியத் தகவல்.
4.8 சதவீத மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற ரெட்டி சாதி மாநிலத்தின் நிலவுடைமையில் 13.5 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது. அவர்கள் ஏன், எப்படி தெலுங்கானா, ஆந்திரா அரசியலில் இவ்வளவு செல்வாக்கு செலுத்த முடிகிறது என்பது புரிகிறதா?
அடுத்தபடியாக மக்கள் தொகையில் 5.7 சதவீதம் உள்ள யாதவர்கள் 8.7 சதவீதம் நிலவுடமையைக் கையில் வைத்திருக்கிறார்கள்.
மாநிலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 0.7 ஏக்கர் நீர்ப்பாசனம் பெற்ற நிலம் இருக்கிறது. ஆனால், ரெட்டி, வெலமா, பேரிகா ஆகிய சாதிகள் தவிர்த்த சமூகத்தின் பிற பிரிவினருக்கு மாநில சராசரிக்கும் குறைவான அளவிலேயே நீர்ப்பாசனம் பெற்ற நிலவுடைமை இருக்கிறது.
சுவாரசியமான சமூகவியல் உண்மைகள் பலவற்றை இந்த சர்வேவும் அதன் மீது செய்யப்பட்ட பகுப்பாய்வும் வெளியே கொண்டுவந்திருக்கின்றன.
சமூகவியல் ஆய்வுகள் பலவற்றை இதன் மீது மேற்கொள்வது எதிர்காலத் திட்டமிடுதல்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

