+2 தேர்வில் முதலிடம் பெற்ற கோபிகா, ஹரீஷ் ஆகியோருக்கு வாழ்த்து!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.மதிவாணன். தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கியில் செயலாளராகப் பணியாற்றி வரும் திரு.மதிவாணன் - திருமதி.அம்பிகா தம்பதியருக்கு ம.ஹரீஷ், ம,வர்ஷன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சக்தி சுகர்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பண்ணாரி அம்மன் பள்ளியில் முறையே 12 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயின்று வந்தனர். மூத்த மகன் ம.ஹரீஷ் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதில் ஹரீஷ் 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து முதலிடம் பெற்ற ஹரீஷ்க்கு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.இராஜேந்திரன். இவர் வேலூரில் வேளாண் பொறியியல் துறையில் அசிஸ்டன்ட் இஞ்சினியராகப் பணியாற்றிவரும் திரு.இராஜேந்திரன் - திருமதி. ஸ்ரீதேவி தம்பதியினர் இளையமகள் ஆர்.கோபிகா, கோபிசெட்டிபாளையத்திலுள்ள டி.கே.கே. மெட்ரிக்குலேசன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதில் இவர் 600 க்கு 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து கோபிகாவுக்கு பள்ளி அசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கோபிகா ஏற்கனவே இதேபள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சகோதரி ஆர்.ஸ்ரீமிதா எம்சிஏ பட்டம் பெற்று எம்என்சி நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக இருந்து வருகிறார்.

கடந்த இருவருடங்களுக்குப் முன்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபிகாவுக்கு ஊர்பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கோபிகாவுக்கு கணினி பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ப்ளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற கோபிகா, ஹரீஷ் ஆகியோருக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள இராஜகம்பள சமுதாய மாணவச் செல்வங்களுக்கும் சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

