கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளராகவும், மதுக்கரை ஒன்றியச் செயலாளராகவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள இரு இராஜகம்பளத்தார் சமுதாயத் தலைவர்களை கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் நிர்வாகிகளுக்கு, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் கிளைக் கழகம் மற்றும் ஒன்றிய அளவைத் தாண்டிய மாவட்ட, மாநிலப் பொறுப்புகள் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டு வந்தன என்பது சமுதாய மக்களின் நீண்டகாலக் கருத்தாக இருந்து வந்தது. தமிழகம் முழுவதும் கணிசமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கு அரசியல் அங்கீகாரம் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலும் பல ஆண்டுகளாக நிலவி வந்தது.
அந்த நிலை சமீபகாலமாக படிப்படியாக மாறி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்று வருவது, சமுதாய மக்களிடையே புதிய நம்பிக்கையையும், குறிப்பாக அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வரிசையில், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அ.தி.மு.க.) இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த இரு தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக வக்கம் பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், ஆனைமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளருமான திரு. வி.என். ரவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கோவை மத்திய மாவட்டத்தின் மதுக்கரை ஒன்றியச் செயலாளராக திரு. டி. சிவசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி க. பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் சென்னை சென்று கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனையடுத்து, கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கே.டி. மோகன்ராஜ் தலைமையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு. வி.என். ரவி மற்றும் திரு. டி. சிவசாமி ஆகியோரை அவர்களது இல்லங்களில் தனித்தனியாக நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், கோவை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில்குமார், கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. த. குணசேகரன், கோவை வடக்கு மாவட்டப் பொருளாளர் திரு. ஆர். கணேசன், மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு. ஆர்.ஏ. கணேசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி என். பாக்யலட்சுமி, திருமதி தேவி, இளைஞர் அணி செயலாளர் திரு. க. குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு புதிய பொறுப்பேற்ற தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் நிர்வாகிகள் மாவட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்புகளில் தொடர்ந்து முன்னேறி வருவது, எதிர்காலத்தில் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் மேலும் வலுப்பெற வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை சமுதாய மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.