மக்கள் தொகை அடிப்படையில் ஓ.பி.சி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குக - விடுதலைக்களம் கோரிக்கை.
மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் : விடுதலை களம் கோரிக்கை.
நாமக்கல், ஜுலை :25. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேணடும் என விடுதலை களம் கட்சியினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை :
சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டில் 70% மக்களை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்ட உழைக்கும் சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகள் சூரையாடப்பட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவதாக சொல்லப்பட்டாலும், அரசியல் சித்து விளையாட்டுகளாலும், அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளாலும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்து விட்டபொழுதிலும் வெறும் 12 % இடங்களையே பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றுள்ளனர் என்பதும், கேபினெட் செயலர் அந்தஸ்தில் அதிகாரிகளோ, ஐஐடி போன்ற உழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனங்களில் பேராசியர்களாகவோ பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை என்பது இந்திய கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது.
மருத்துவ துறையிலேயே இடஒதுக்கீட்டை மறுக்கும் போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை உயர் பதவிகளில் அமர்த்த என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் 2020-21 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி பிரிவினரை தனியாக குறிக்கும் வகையில் படிவத்தில் மாற்றம் செய்து , மக்கள் தொகைக்கேற்ப நிர்வாகம், நீதித்துறை, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என விடுதலைக்களம் மத்திய அரசை வலியுறுத்துகிறது என அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

