🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒண்டிவீரன் வந்தேறியா? பீரங்கிகளை எதிர்கொண்டு பூலித்தேவனுக்கு தோள்கொடுத்த மாவீரன்!

கிபி 18ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற மன்னன் வீரன் பூலித்தேவனின் படைத் தளபதியாக விளங்கியவர் ஒண்டிவீரன். தனி ஒருவனாக ஒண்டியாக எதிரிகளின் படைகளை துவம்சம் செய்ததால் ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஓண்டிவீரன், தேவர் சமூகத்தைச் சேர்ந்த பூலித் தேவனின் முக்கிய தளபதியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரில்லாப் போர் முறையிலும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். போர்த்தந்திரங்கள் முற்றிலும் தெரிந்தவர். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர். ஈடு இணை எதுவுமே இல்லாத் தளபதி ஒண்டிவீரன்.

இன்றைய நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் கிராமத்தில் இருந்து வடமேற்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்தான் நெற்கட்டான் செவ்வல் எனும் கிராமம் ஆகும்.

அதனையும் அதனைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாளையங்களை எல்லாம் ஒன்றிணைந்த பகுதிதான் நெற்கட்டான் செவ்வல் (செவ்வயல்) பாளையமாகும். இந்தப் பாளையம் என்பது அக்காலத்தில் குறுநில மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் பேரரசுக்கு வரியாக நெல்லை கட்டுவதால் நெற்கட்டும் செவல் என்று அழைக்கப்பட்டது. இவ்வூரை அன்றைய மன்னனான பூலித்தேவன் ஆண்டு கொண்டிருந்தார்.

இப்பகுதியில் காலம் காலமாக முகலாய அரசுக்கு வரி கொடுத்து வந்தனர். அக்காலகட்டத்தில் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர் வரி கேட்டு ஆட்கள் அனுப்பிய போது அதனைக் கட்ட பூலித்தேவன் மறுப்புத் தெரிவித்தார். இதன் காரணமாக 1755 ஆம் ஆண்டு பூலித்தேவனுக்கு எதிராக ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். ஆங்கிலேயப் படைக்கு அலெக்சாண்டர் ஹெரான் தலைமை தாங்கினார். பூலித்தேவனை எப்படியாவது அடிமைப்படுத்திட வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் நெற்கட்டான் செவல் எல்லைப்பகுதியான தென்மலையில் முகாமிடுகின்றனர். பூலித்தேவனுடைய படைகள் வரும்பொழுது தென்மலை பகுதியில் முகாமிட்டிருந்த கூடிய ஆங்கிலேயர்கள் பீரங்கிகளைக் கொண்டு தாக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. அந்தக் காலத்தைப் பொறுத்த வரைக்கும் இந்திய மன்னர்களுக்கு மிகப்பெரிய சவாலாக பார்க்கப்பட்ட ஒன்று, பீரங்கை போன்ற நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கக்கூடிய ஆயுதங்களை மன்னர்கள் பார்த்ததே கிடையாது என்பது தான். அப்படிப்பட்ட நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை  எதிர்த்து ஜெயிப்பது அப்படிங்கிறது கனவிலும் நடக்காத ஒன்றாக பார்க்கப்பட்டது.

அந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர்களின் பீரங்கிகளைக்கொண்டே, அவர்களின் படை தங்கியிருக்கும் தென்மலை முகாமிலேயே ஓழித்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் பூலித்தேவன்.  அந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடிய ஆற்றல் மிகு செயல்வீரராக பூலித்தேவன் தேர்ந்தெடுத்த ஒப்பற்ற மாவீரன் தான் ஓண்டிவீரன். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்த் திட்டங்கள் வகுப்பதிலும், மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செய்வதிலும் மிகவும் கைதேர்ந்தவரான ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன்.

ஒண்டிவீரன் இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்குத் தன்னந்தனியாகச் சென்றான். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன்.

தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையை நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கிக் கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன். அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டியை தரையில் குத்தினான். அந்த ஈட்டி ஒண்டிவீரனது கைகளைக் கிளித்து தரையில் குற்றி நின்றது.

சத்தம் போடாது அந்த வலியைப் பொறுத்துக் கொண்டார். ஈட்டியைக் கையிலிருந்து பிடுங்க முயன்றார் ஆனால் குதிரை கனைத்து விட்டால் எதிரி படை விழித்து விடும் எனக் கருதி இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையால் எடுத்து வெட்டிக் கொண்டு எழுந்தார் அந்த வீரன். பின்பு பீரங்கிகளை ஆங்கிலயர்களின் கோட்டையை நோக்கி திருப்பி வைத்து விட்டு வெங்கல டபராவை ஒலிக்க வைத்து விட்டுப் புறப்பட்டார் ஒண்டிவீரன்.

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.

பூலித்தேவனுக்குப் பிறகும் கூட, அவரது மகன்களுக்கும் உதவியாக இருந்து புதுக்கோட்டைப் போர் முதலியவற்றில் வெள்ளையர்களை எதிர்த்து வெற்றிவாகை சூடியவர். நொண்டிச் சிந்து, ஒண்டிவீரன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவையே அவனது வீரத்திற்கு சாட்சி.

ஒண்டிவீரனின் மரணம் பற்றிய முழுத் தகவல்கள் பெரிதாக இல்லை. எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது என நம்பப்படுகிறது.

2000 ஆம் ஆண்டு தமிழக அரசிடம் ஒண்டிவீரனின் இனத்தவர்கள் தங்கள் சார்ந்த வீரனுக்கு ஒரு நினைவுமண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2011 ஆம் ஆண்டு அப்போதைய தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதியின் மூலம் 49 லட்சம் ஒதுக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் ரூபாய் 50 இலட்சம் செலவில் ஒண்டிவீரன் மணிமண்டபம் தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் 1 மார்ச் 2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தெலுங்கை தாய்மொழியாகக்கொண்ட ஒண்டிவீரன் முன்னோர்கள் விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது தென்பகுதிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் மண்ணுக்காகவும், தமிழ் மன்னனின் போர்ப்படை தளபதியாகவும் விளங்கிய ஒண்டிவீரன் போன்ற எண்ணற்ற தெலுங்கர்கள் இன்னுயிர் துறந்த மாவீரர்களாக இருப்பது வரலாறு சொல்லும் உண்மை. தன்னந்தனியாளாக பீரங்கியை எதிர்கொண்டு பூலித்தேவனின் பாளையத்திற்கு உயிர்கொடுத்த அருந்ததிய மாவீரன் ஒண்டிவீரன் வந்தேறி என்றால் யார் பூர்வகுடி?.

ஆகஸ்டு' 20 ஒண்டிவீரனின் நினைவுநாள். ஓங்குக ஒண்டிவீரன் புகழ்!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved