🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புரட்சியின் நாயகன் சே குவேரா பிறந்தநாள் இன்று!

சேகுவேரா அல்லது சே என்று அழைக்கப்படும் இவர் ஜூன் 14 1928 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவிலுள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் எர்னஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிசிலியா தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர் “ஏர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா”. மகன் மீது மிகுந்த அன்பு கொண்ட தாய்⸴ தந்தையர் தங்கள் பெயர்களை இணைத்து குவேரா டி லா செர்னா என பெயர் சூட்டினர். அவரை செல்லமாக வீட்டில் டேட்டி என்று அழைத்தனர்.

இவர் ஓர் இடதுசாரி குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இரண்டு வயதாக இருக்கும் போது ஆஸ்துமா நோய் கண்டறியப்பட்டது. வாழ்நாள் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரைப் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலிருந்தபடியே பாடங்களை படித்தார்.

புரட்சி என்றால் உடனே நினைவிற்கு வரும் பெயர்களில் முதன்மையானது சேகுவேராவின் பெயர் தான்.

உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும்⸴ தியாகத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றவர் சேகுவேரா. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன், புரட்சியாளர்⸴ மருத்துவர்,  அரசியல்வாதி⸴ இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட போராளி.

“நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்” என்பதே இவரின் வைரவரிகளாகும். “நான் ஒரு கொரில்லா போராளி” அப்படி அழைப்பதையே விரும்புகின்றேன் என்று கூறிய புரட்சியாளர்.

சேகுவேரா மருத்துவராக இருந்து ஒரு போராளியாக உருவெடுத்து புகழ்பெற்ற கம்யூனிசப் புரட்சியாளர். ஏகாதிபத்தியத்தின் எதிரி. அடக்கு முறையை அடக்கப் பிறந்தவரென்று அறியப்படும் சேகுவேரா புரட்சிக்கு புகழ்பெற்ற தலை சிறந்த போராளி. இவரே உண்மையான இளைஞர்களின் சக்தி என்றால் அது மிகையாகாது.

அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற அவர், 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, தொழுநோய்க்கு தன்னால் மருத்துவம் கண்டுபிடிக்க முடியும் என எண்ணி மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்கா, அமேசன் முழுவதும் சுற்றித் திரிந்தார். 

மருத்துவப் படிப்பு⸴ புத்தகங்கள்⸴ தொடர்ச்சியான தேர்வு என்பவற்றால் சோர்வடைந்திருந்தார் சேகுவேரா. அதிலிருந்து மீள அவர் தேர்ந்தெடுத்தது தான் பயணங்கள். அவரோடு அவரது நண்பரும் சேர்ந்து கொண்டார்.

1952 ஆம் ஆண்டு ஜனவரியில் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். 8 மாதங்கள் ஐந்து நாடுகளைச் சுற்றிவர வேண்டுமென்பது அவர்களது திட்டமாக இருந்தது. மோட்டார் சைக்கிளில் பயணிக்க தீர்மானித்தனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் சுற்றிவர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆண்டிஸ் மலைத்தொடரைக் கடந்து சென்று சேர வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அப்பயணம் எளிதாக அமையவில்லை.

ஆபத்தான பகுதிகளில் அவர்கள் பயணிக்க வேண்டியிருந்தது. தங்கள் பயணத்தின் மேல் உறுதியாக இருந்த இருவரும் தொடர்ந்து பயணித்தனர். அந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் பேரு நாட்டினை சென்றடைந்தனர்.

அங்கு பூர்வகுடிகள் படும் துன்பங்களை நேரில் கண்டனர். சான் பாபிலோனா நகருக்குச் சென்ற அவர் அங்கு தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

அங்கிருந்து வெனிசூலாவின் காரகாசாவுக்கு நீண்ட பேருந்து பயணம் மேற்கொண்டு அங்கிருந்து சரக்கு விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநில மியாமி நகருக்குச் சென்று அங்கிருந்து 1952 செப்டம்பரில் தனது பயணத்தை முடித்து ஆர்ஜெண்டீனாவுக்கு மீண்டும் திரும்பினார்.

சேகுவேரா கவுதமாலாவில் இருந்த போது கியூப நண்பர்கள் வழியாக பிடல் காஸ்ட்ரோ பற்றி அறிந்திருந்தார். ஆட்சியில் இருந்த பாடிஸ்டா அரசுக்கு எதிராகப் பிடல்காஸ்ட்ரோ போராடிக் கொண்டிருந்தார்.

நண்பர் ஒருவரின் மூலம் சேகுவராவிற்கு காஸ்ட்ரோவை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 1953ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த புரட்சிக்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அரசினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ மெக்சிக்கோ வந்திருந்தார். அந்த சமயத்தில் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார் சேகுவேரா.

இந்த சமயமே உலகை உலுக்க போகும் புரட்சிக்கான புள்ளி வைக்கப்பட்டது. கியூபப் புரட்சிக்கான திட்டம் தீட்டப்பட்டது. ஆட்கள் திரட்டப்பட்டனர். ஆயுதங்களும் திரட்டப்பட்டன. புரட்சியாளர்களுக்கு கொரில்லா பயிற்சி அளிக்கப்பட்டது.

பாடிஸ்டா ராணுவத்தை முடக்க நீர் வழிப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு கிரான்மா எனும் கள்ளத் தோணியில் சேகுவேரா காஸ்ட்ரோ உள்ளிட்ட 82 வீரர்கள் 1956ஆம் ஆண்டு கியூபாவிற்கு புறப்பட்டனர்.

1957 ஆம் ஆண்டு ராணுவ தளபதி கொல்லப்பட்டார். இதுவே புரட்சியாளர்களின் முதல் வெற்றியாகும். 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கியூபா தலைநகரான ஹவானா புரட்சிப்படை வசம் வந்தது. காஸ்ட்ரோவிடம் கியூப ஆட்சி வந்தது.

அதன் பின் பொலிவியா நாட்டின் விடுதலைக்கு போராட சென்ற சேகுவேரா அங்கு 1967 ஒக்டோபர் 9 திகதி பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் 18ஆம் திகதியன்று கியூபாவின் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க சேகுவேரா கொல்லப்பட்ட செய்தியை கியூப மக்களுக்கு அறிவித்தார் பிடல் காஸ்ட்ரோ.

ஒட்டுமொத்த கியூபாவும் சோகத்தில் மூழ்கியது. சேகுவேராவின் உடல் பொலிவியாவிலுள்ள லவே கிறேன்டாவில் புதைக்கப்பட்டது. கியூபாவின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க 1997-ஆம் ஆண்டு மீண்டும் தோண்டப்பட்டு சேகுவேராவின் எலும்புக்கூடுகள் ஒப்படைக்கப்பட்டன.

தான் கொண்ட கொள்கைகளை எந்த சமரசமும் இன்றி நேசித்தவர் சேகுவேரா. ஆதனால்தான் பிறப்பினால் ஓர் அர்ஜெண்டினரான சேகுவேரா க்யூபாவிற்காகவும்⸴ காங்கோவிற்காகவும்⸴ பொலிவியவிற்காகவும் போராட முடிந்தது.

சேகுவேராவின் புரட்சி வரலாற்றில் நிலைத்திருப்பதின் காரணம் அது அன்பின் உன்னதத்தால் வழிநடத்தப்பட்டது என்றால் அதுமிகையாகாது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved