🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 48

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 49

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில் ஊழ்வினை என்ற ஒன்றை பற்றி சிந்தித்து கொண்டு உள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தனது குறளில் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்! என கூறுகின்றார்.

நாம் ஆற்றிய நல்வினை, தீவினைச் சம்பாத்தியங்கள் நிச்சயம் நமது வாழ்க்கையை, குடும்ப அங்கத்தினர்களைப் பாதிக்கும் என கூறுகின்றார்..

கடவுள் நம்பிக்கையும், அறத்தின் பயனும் இதற்கே நம் மனதை வழிநடத்தும் சக்திகளாக இருப்பின் இத்தகைய மயக்கங்களுக்கும், போலிச் சுகங்களுக்கும், கானல் நீர் வருமானங்களுக்கும், கறை படிந்த நிதியத்திற்கும் கை நீட்டி அடிமையாகாது ஒழுக்கத்தின் பால் நின்று, உயர் அறத்தின் உண்மை நலன்களை மட்டும் ஈட்டி நிற்போம். அவை உடனடியாக பலனைத் தராவிட்டாலும் எக்காலத்திலும் கெடுதலைக் கொடாது நின்று நன்மை பயக்கும்.

நியாயங்களும், நேர்மைகளும் நிம்மதியை நிச்சயம் தரும். கவலையற்ற வாழ்க்கை ஆரோக்கியத்தைத் தரும். அது தொடர்ந்து நேர்மறையான எண்ணத்தை நல்கும். அதன்பயனாய் நல் ஆக்கங்களைத் தரும். நல் எண்ணங்கள் என்றும் நன்மையையே தரும். எனவே நியாயமான பொருள் ஈட்டலால் உள நலத்தோடும், சீரும் சிறப்பும் பொங்கி வரும் இல்லறத்தோடும், துன்பம் இல்லா வாழ்வோடும், மங்காப் புகழோடும் பயன் பெறுவோம், உயர்வடைவோம்.

ஆகவே மறந்தும் அநியாயத்தை ஆதரிப்பதோ, கடைப்பிடிப்பதோ கூடாது. இதற்கு உதாரணமாக நமது இலக்கியங்களில் இருந்து சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.


சிலப்பதிகாரம்: 55

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,


திருமந்திரம்: 323

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி

ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி

மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை

நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.


திருமந்திரம்: 450

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்

பார்முத லாகப் பயிலுங் கடத்திலே

நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்

சோராமற் காணுஞ் சுகம் அறிந்தேனே


திருமந்திரம்: 1630

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்

பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே

அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி

இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

ஔவையார்.ஆத்திச்சூடி:

வஞ்சகம்பேசேல்.

கெடுப்பதொழி.

கொள்ளைவிரும்பேல்.

சித்திரம்பேசேல்.

சூது விரும்பேல்

இங்கே சனாதனம் குறித்து அனைவரும் சண்டை யிட்டு கொண்டு உள்ளனர். உண்மையில் சனாதனம் என்பது அறநெறியுடன் வாழ்தல். இது மதம், மொழி, நாடு , ஜாதி என எல்லாவற்றையும் கடந்து அனைத்திற்கும் பொதுவானது மற்றும் நிலையானது.இந்த பிரபஞ்சம் தோன்றிய நாள் முதல் உள்ளது. இது ஆண்டிக்கும் , அரசனுக்கும் ஒன்றே! பேசுபவனுக்கும், பேசாதவற்றுக்கும் ஒன்றே!

இங்கே குறிப்பிட்ட செய்யுட்களின் விளக்கங்களை அடுத்த வாரம் சிந்திப்போம்


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.


 


 


 


 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved