🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மனிதகுல மருத்துவன் காரல் மார்க்ஸ் நினைவுநாள் இன்று!

‘புவித் தோன்றலும், மனிதகுல வரலாறும்’ என்ற பொருளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சரியான பொருள் விளக்கம் கிடைக்காமல் தடுமாறிய அறிவியல் உலகின் தீரா குழப்பத்திற்கு தீர்வு சொன்னவர்கள், மாமேதை கார்ல் மார்க்ஸ், மாமேதை சார்லஸ் டார்வின், மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வர்க்கபேத சமுதாயக் கொடுமைகளுக்கு மாற்றுச் சமுதாயம் இருக்கிறது, என்பதை மாமேதை காரல் மார்க்ஸ் கண்டுபிடித்து இந்த உலகுக்கே அறிவித்தார்.

உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை தத்துவத்தை கண்டுபிடித்த காரல் மார்க்ஸ் இறுதி வரை தன்னை பற்றி சிந்திக்கவே இல்லை. அவரும், ஜென்னி மார்க்ஸும் இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் பாட்டாளிகளுக்கு ஓய்வு, சரியான கூலி, நிம்மதியான உறக்கம் இல்லாமல் போயிருக்கும்.  அத்தகைய மேமதையின் நினைவு தினம் இன்று. இதில் அவரை பற்றி நாம் நினைவு கூற வேண்டியவை பல..

ஒரு நாள் அந்த பெண்மணியின் குழந்தைக்கு பால் குடுக்க முயற்சிக்கிறாள். பசியில் கதறும் குழந்தை வேகமாக தாயின் மார்பில் பாலை உறிஞ்சுகிறது. ஆனால், குழந்தையின் வாயில் ரத்தம். வறுமையால் சரியாக சாப்பிடாததால் தாயின் மார்பில் பால் சுரக்காமல் ரத்தம் வெளியேறுகிறது. மற்றுமொரு நாள் அதே பெண்ணின் 8வயது மகன் இறந்து விடுகிறான். சவப்பெட்டி வாங்க கூட பணமில்லை. வீட்டு முற்றத்து தரையில் பிணம் கிடக்கிறது. அந்த பெண்ணின் கணவன் அடகு கடைக்கு விரைகிறான். தான் அணிந்திருந்த மேல் கோட்டை கழற்றி அடகு வைத்து விட்டு அதில் கிடைத்த பணத்தை வைத்து அந்த குழந்தையின் இறுதி காரியங்களை செய்து முடிக்கிறார்கள்.

இவ்வளவு வறுமைக்கு மத்தியிலும் உலக தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை சாசனமான மூலதனம் என்ற புத்தகத்தை தனது மனைவியின் துணையோடு எழுதி முடிக்கிறார் அந்த கணவர். அந்த கணவரின் பெயர்தான் காரல் மார்ஸ் அவர் வரலாற்றில் மிளிர காரணமான மனைவியின் பெயர்தான் ஜென்னி மார்க்ஸ்.

கடந்த 1000ம் ஆண்டுகளில் வாழ்ந்த தலைசிறந்த மனிதர்களில் முதல் நபராக தேர்வு செய்யப்பட்டவர் காரல்மார்க்ஸ். 1818ம் ஆண்டு வழக்கறிஞர் ஹென்றிச் மார்க்ஸ் மற்றும் ஹென்றிட் ப்ரெஸ்பெர்க் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மார்க்ஸ்.இளமை காலத்தில் ரோமியோவாகவும், விடலை பருவத்து குறும்புகளுடனும் சுற்றிக்கொண்டிருந்த சாதரண இளைஞர்தான் காரல்மார்க்ஸ். ஆனால், காதல்தான் அவரது வாழ்வை மாற்றியது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

உலக தொழிலாளிகளின் கடவுளாக பார்க்கப்படும் காரல் ஜென்னிக்காக முதலில் காதல் கவிதைகள் எழுதி கொண்டிருந்தார். அப்படிதான் முதலில் அவர் எழுதவே தொடங்கியுள்ளார். ஜென்னி இவரை விட வயதில் மூத்தவர், அழகானவர், பணக்காரர். ஆனாலும், இது எதுவும் அவர்களின் காதலுக்கு தடையில்லை. மார்க்ஸ் படிப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் 6 வருடத்துக்கும் மேலாக ஜென்னி காத்திருந்தார். அங்குதான் தன்னுடைய அரசியல் ஞானத்தையும் கூட கண்டடைந்தார் மார்க்ஸ்..

பின் அவர்கள் பெற்றோரின் சம்மதம் கிடைக்காத நிலையில் லண்டன் பேரிஸில் சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வரலாற்றில் காதலுக்காக எடுத்துக்காட்டாய் சொல்லப்படும் நபர்களுக்கெல்லாம் முன்னோடி இவர்கள் என்றால் மிகையாகாது.4 நாடுகள் கடத்தப்பட்டபோதும், 8 குழந்தைகளில் பாதி பேர் நோய்வாய்ப்பட்டு இறந்த போதும், வீட்டு வாடகைக்கும், உண்ண உணவிற்கும் வழியில்லாத நிலைமையிலும் கூட காரல் கையை ஜென்னி இம்மியளவும் விடவில்லை. இன்னும் இறுக பற்றி கொண்டார்.

அவருக்கு தெரியும் நம் பசியை பார்த்தால் கோடான கோடி உழைப்பாளிகளின் வயிறு காய்ந்து விடும் என்று. தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தார். காரல் மார்க்சின் எழுத்து பிரதிகளை சரியாக திருத்தி எழுதி அதை அச்சுக்கு அனுப்புவதை கூட ஜென்னிதான் செய்தார். காரணம், அவருக்கு மட்டுமே காரலின் கையெழுத்து புரியும்.

சிறந்த நண்பர்களுக்கு எடுத்து காட்டும் இவர்களே. காரல் மார்க்சுக்கு இணையான மற்றுமொரு தத்துவவாதி பிரெட்ரிக் ஏங்கல்ஸ். பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மார்க்ஸோடு சேர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக பாடுபட்டவர். இவர் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூல் மிக புகழப்பெற்றது.

காரல் மார்க்ஸோடு இணைந்து தீவிர எழுத்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஏங்கல்ஸ் கார்ல் மார்க்ஸ் வறுமையில் உழல்வதன் காரணமாக தனது தந்தை தொழிற்சாலையில் பணிபுரிந்து அதன் மூலம் வரும் வருமானத்தை கார்ல் மார்க்சுக்கு அனுப்பி கொண்டிருந்தார். இவர் இல்லாமல், காரல் மார்க்சின் பாதி எழுத்துக்கள் இந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கிடைத்திருக்கவே முடியாது.

கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி விலை லாபம், சோசலிசம், தத்துவத்தின் வறுமை, கூலி உழைப்பும் மூலதனமும், தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ், இந்தியாவின் முதல் விடுதலைப் போர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை தன் வாழ்நாளில் எழுதியுள்ளார் காரல் மார்க்ஸ். குறிப்பாக, அந்த காலகட்டத்திலேயே இந்திய சமூகத்தை உள்வாங்கியிருந்த காரல் மார்க்ஸ் இந்திய சுதந்திர போராட்டம் குறித்தும், சமூக அமைப்பு குறித்தும் பேசியுள்ளார். இந்தியாவை பற்றி மார்க்ஸ் என்ற புத்தகத்தில் இந்தியாவில் நிலவும் சாதிய நிலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதிய, இன வெறி ஒழியாமல் புரட்சி சாத்தியமில்லை என்று அன்றே சொன்னவர் காரல் மார்க்ஸ்.

உலக தத்துவத்திற்கு தகப்பன் என்றே இவரை சொல்லலாம். எனக்கு முன்னாள் வந்த தத்துவவாதிகள் உலகை விளக்குவதிலேயே நேரத்தை கழித்து விட்டனர். உலகத்தை விளக்குவது அல்ல நம் வேலை, மாறாக அதை மாற்றுவது என்று சொன்னார் மாமேதை மார்க்ஸ்.

முதலாளித்துவ சமூகத்தில் பணத்திற்கு இருக்கும் மதிப்பு, அதை நம்பியிருக்கும் மனிதர்களுக்கு இருக்காது என்று கூறினார் காரல். மனிதனாக பிறந்த யாரும் பயனின்றி அழியக்கூடாது என்று கூறிய காரல் மார்க்ஸ் இது போல் எண்ணற்ற மனித குல விடுதலைக்கான தத்துவங்களை கூறியுள்ளார்.

மார்க்ஸ் என்னும் மாபெருங்கடலை பற்றி ஒரு கட்டுரையில் விவரிப்பது சாத்தியமல்ல. அவரை படிக்க படிக்க இன்னும் ஆழமாய் சென்று கொண்டே இருக்கும். உலகத்திற்கே வழிகாட்டிய மார்க்சுக்கு வழிகாட்டி ஜென்னிதான். ஜென்னியில்லையேல் மார்க்ஸ் இல்லை. நோய்வாய்ப்பட்டு 1882ம் ஆண்டு ஜென்னி இறந்து விட நடைபிணமானார் மார்க்ஸ்.

அதிலிருந்து ஒரு வருடம் கழித்து 1883ம் ஆண்டு மார்ச் 14 அன்று மார்க்ஸும் சிந்திப்பதை நிறுத்தி கொண்டார். சிந்தனையை நம்மிடம் கொடுத்து விட்டு சென்றார். எனவே, இந்த நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுவது மட்டுமின்றி அவரை ஆழ்ந்து வாசிப்பதே இன்றைய காலகட்டத்தின் தேவை.

நன்றி:சுபாஷ் சந்திரபோஸ்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved