🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமெரிக்க அதிபர் தேர்தல் விளம்பரத்தில் சிந்துநதி நீர் ஒப்பந்தம்!

இம்மாதம் 22-ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையே 1960-இல் கையெழுத்தான சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கப்படுவதாக ஏப்ரல் 23 ஆம் தேதி இந்திய அரசு அறிவித்தது. 

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, சிந்து நதியின் கிளை நதிகள் கிழக்கு மற்றும் மேற்கு நதிகள் என பிரிக்கப்பட்டன. சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிகள் கிழக்கு நதிகள் எனப்படுகின்றன. ஜீலம், செனாப் மற்றும் சிந்து ஆகியவை மேற்கு நதிகள் என குறிப்பிடப்படுகின்றன.

திபெத்தில் உள்ள கைலாய மலை சிந்து நதியின் பிறப்பிடமாகும். இந்த நதியின் மூலமானது சீனாவின் தென்மேற்கு திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள மாபம் ஏரிக்கு அருகில், சுமார் 18,000 அடி உயரத்தில் காணப்படுகிறது. இது வடமேற்கே சுமார் 200 மைல்கள் சென்று, காஷ்மீரின் சர்ச்சைக்குரிய தென்கிழக்கு எல்லையை 15,000 அடி உயரத்தில் கடந்து செல்கிறது. அதன் முதல் பெரிய துணை நதியான ஜான்ஸ்கர் நதி, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட லடாக்கில் அமைந்துள்ளது. பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் 150 மைல்கள் பயணம் செய்த பிறகு, ஷியோக் நதி அதன் வலது கரையில் சிந்து நதியுடன் இணைகிறது. ஷியோக்கைச் சந்தித்த பிறகு, பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ள காரகோரம், நங்கா பர்பத் மற்றும் கோஹிஸ்தான் மலைகளிலிருந்து தண்ணீரை எடுக்கிறது. கில்கிட், ஷிகார் மற்றும் பிற போன்ற பனிப்பாறை உருகும் நீர் ஓடைகள் சிந்து நதியில் பாய்கின்றன.


ஸ்கார்டு அருகே பால்டிஸ்தானில் உருவாகும் ஷிகார் நதி, சிந்து நதியில் கலக்கிறது. பல மைல்கள் கீழ்நோக்கி, கில்கிட் நதி மற்றொரு வலது கரை துணை நதியான புஞ்சியுடன் இணைகிறது. நங்கா பர்பத்தின் கிழக்கு சரிவில் தொடங்கும் ஆஸ்டர் என்ற ஒரு சிறிய துணை நதி உள்ளது. சிந்து நதி மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கே பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் பாய்வதால், நங்கா பர்பத் மலைத்தொடரைச் சுற்றி 15,000 முதல் 17,000 அடி ஆழமும் 12 முதல் 16 மைல் நீளமும் கொண்ட பள்ளத்தாக்குகள் உள்ளன. 4,500 முதல் 5,000 அடி உயர வரம்பில், பாறைப் பாதைகள் ஆற்றின் ஓரத்தில் கடுமையாக ஒட்டிக்கொள்கின்றன.


மேற்கு திபெத்திலிருந்து காஷ்மீர் வரை இந்த நதி செல்லும்போது, ​​அது இடதுபுறமாக திடீரென வளைந்து, நங்கா பர்பத் மலைத்தொடரைத் தொடர்ந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் அரேபிய கடலில் கலக்கிறது. ஆற்றின் மொத்த நீளம் 3,180 கிலோமீட்டர்கள்.

கிட்டத்தட்ட 11,65,000 சதுர கிலோமீட்டர் வடிகால் பரப்பளவைக் கொண்ட இந்த நதி, உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாகும். உலகின் 50 பெரிய ஆறுகளில் ஒன்றான இது, பாயும் போது சராசரியாக ஆண்டுக்கு சுமார் 243 கனகிமீ நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் 47 சதவிகிதம், இந்தியாவில் 39 சதவிகிதம், சீனாவில் 8 சதவிகிதம் மற்றும் ஆப்கானிஸ்தானில் 6 சதவிகிதம் அமைந்துள்ளது.லடாக்கின் ஜான்ஸ்கர் நதி மற்றும் சமவெளியின் பஞ்ச்நாத் நதி ஆகியவை அதன் இடது கரை துணை நதிகளாகும். ஐந்து பெரிய துணை நதிகள் (ஜீலம் நதி மிகச் சிறியது) மற்றும் ஏராளமான சிறிய ஆறுகளைக் கொண்ட பஞ்ச்நாட்டில் குறைந்தது ஆறு சிறிய ஆறுகள் பாய்கின்றன.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு வரலாற்று பார்வை...

சிந்து நதி அமைப்பின் கீழ் உள்ள ஆறு நதிகளான சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய ஆறுகளின் நீர் எவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒப்பந்தம் நிர்வகிக்கிறது. இந்தியாவுக்கு 20% தண்ணீரையும், மீதமுள்ள 80% தண்ணீரை பாகிஸ்தானுக்கும் வழங்குகிறது. ஒட்டுமொத்த பாகிஸ்தான் நீர்ப்பாசன தேவைக்கு 93% தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கிறது. சிந்து நதி கரையோரத்தில் 61% இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். 

19.09.1960  அன்று  கராச்சி நகரில் அதிபர் மாளிகைத் திடலில் அலங்கரிக்கப் பட்டிருந்த பந்தலில் நடந்த இந்த விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். உடன்பாட்டில் இரு தலைவர்களும் கையெழுத்திட்ட போது, ஒட்டுமொத்த திடலும் விண்ணதிர பெரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றது. உடன்பாடு கையெழுத்திடும் முன்னரும் பின்னரும் ராணுவத்தினர் இரு நாடுகளின் தேசிய கீதங்களை இசைத்தனர். உடன்பாடு கையெழுத்திடுவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னர் விழாப் பந்தலுக்கு நேருவும் அயூப் கானும் சேர்ந்தாற்போல வந்தனர். இருவருடனும் உலக வங்கியின் துணைத் தலைவர் இலிப்  இரு நாடுகளும் இந்த உடன்பாட்டை எட்டுவதில் பெரும் உதவி செய்த உலக வங்கி சார்பில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.


இந்தியாவின் சார்பில் பாசனத் துறை அமைச்சர் ஹபீஸ் முகமது இப்ராஹிம், இணை அமைச்சர் ஜெய் சுக்லால் ஹாத்தி, பாகிஸ்தான் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மன்சூர் காதிர், நிதித் துறை அமைச்சர் ஷாயிப், வெளியுறவுச் செயலர் இக்ரமுல்லா போன்றோர் கலந்து கொண்டனர். பிரிட்டன் நாடாளுமன்ற துணைச் செயலர் தாம்சன், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதர்களும் வந்திருந்தனர்.

சிந்து நதி தீரத்திலுள்ள அனைத்து நதிகளின் நீரைத் திருப்திகரமாகப் பகிர்ந்து கொள்வது பற்றி உடன்படுவதுடன், இவ்விஷயத்தில் இரு நாடுகளின் பொறுப்புகளையும் உரிமைகளையும்கூட உடன்பாடு வரையறுத்தது. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த நதி நீர்த் தகராறு முடிவுக்கு வந்ததாக அப்போது இரு தரப்பும் கொண்டாடியது; உலகின் பல்வேறு நாடுகளும்கூட வாழ்த்தின; வரவேற்றன. இந்த உடன்பாடு எட்டப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடந்துகொண்டிருந்தது.

சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாட்டை எட்டியதற்காக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களை நேருவையும் அயூப்கானையும் பாராட்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பணம் செலுத்தி நியூயார்க் டைம்ஸில் விளம்பரங்களை வெளியிட்டிருக்கின்றனர். இந்த விளம்பரத்தில் கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் இரு கட்சிகளின் முக்கிய செனட்டர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

விளம்பரத்தில், 'தங்கள் மக்களின் பொது நலனுக்காக சிந்து நதி தீர தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டு தீர்க்க தரிசனத்துடன் நடந்துகொண்டும், எவ்வளவு சிக்கலான சர்வதேச பிரச்சினையாக இருப்பினும் பொறுமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வு காண்பது சாத்தியமே என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியதற்காகவும் இந்தியப் பிரதமர் நேருவையும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கானையும் பாராட்டி வணங்குகிறோம்' என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையில் உருவாகிவரும் புதிய உறவின் அடையாளம்தான் தன்னுடைய வருகையும் சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாடும் என்று கராச்சி நகர்மன்றம் அளித்த வரவேற்பில் பேசிய பிரதமர் நேரு குறிப்பிட்டார்.

மிகுந்த தொலைநோக்குடனும் நல்லெண்ணத்துடனுமான நேருவுடைய அப்போதைய பேச்சின் ஒரு பகுதி:

"கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்று விரும்புவதுடன் மட்டுமின்றி, எல்லைக்கு இருபுறமும் உள்ளவர்கள் இடையே புதிய உறவு முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம். எனவே, நான் இங்கே வந்திருப்பது இந்த அடிப்படை உண்மையின் அடையாளம்தான். பல்வேறு வாழ்க்கை முறையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள நெருக்கமான தொடர்பை வேறெந்த இரு நாடுகளுக்குமிடையே காண முடியாது. இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த புராதன உறவு முறை மீண்டும் நெருக்கமடைந்து நட்புறவு நிலவுமென நம்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள் என்பது ஒருபுறமிருக்கட்டும். புவியியல் அடிப்படையில் இவ்விரு நாடுகளும் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம் என்பதும் ஒருபுறமிருக்கட்டும். இருசாராருக்கும் இடையில் என்னதான் தகராறு இருந்தபோதிலும் அவற்றுக்கு இடையிலுள்ள உறவு முறையை அகற்றிவிட முடியாது என்பதைக் கவனிக்க வேண்டும். இரு சகோதரர்கள் சண்டை போட்டுக் கொள்ளக்கூடும். பழிச் சண்டைகூட போட்டுக்கொள்ளலாம். ஆனால், அவர்களின் சகோதர பாசத்தை அகற்றிவிட முடியாது. இந்த உடன்பாடு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இதுவொரு நீண்ட காலத் தகராறுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. இரு தரப்பிலுமுள்ள மக்களுக்கு - இவர்களின் பெரும்பாலோர் விவசாயிகள் - இந்த உடன்பாடு நன்மையைக் கொண்டு வருவதால் இதுவொரு முக்கியமான ஆவணமாகும். நமக்கு இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாலும் இந்த உடன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது."

கராச்சியில் பிரதமர் நேருவுக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நேரு ஜிந்தாபாத் என்று முழங்கியபடி, லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு வரவேற்றனர்.கராச்சி விமான நிலையத்திலிருந்து அதிபர் மாளிகைக்குச் செல்லும் 10 மைல் தொலைவு பாதை நெடுகிலும் சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். கராச்சி விமான நிலையத்துக்கே வந்து வரவேற்று நேருவை ஒரே காரில் அதிபர் அயூப் கான் அழைத்துச் சென்றார். இருவரும் அதிபர் மாளிகைக்கு வந்தடைய ஒரு மணி நேரத்துக்கும் முன்னரே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே திரண்டிருந்து வரவேற்றனர்.

மிகுந்த தொலைநோக்குடன் இரு நாட்டுத் தலைவர்களுமாகப் பேசிப் பேசி மிகுந்த அக்கறையுடன் மிகவும் கோலாகலமாகச் செய்துகொள்ளப்பட்ட இந்த உடன்பாடு. இந்த உடன்பாட்டுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் எத்தனையோ போர்கள், மோதல்கள் நேர்ந்த போதிலும் உடன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டதில்லை. 

65 ஆண்டுகளுக்குப் பிறகு, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு கொள்கை முடிவெடுத்து  சிந்து நதிநீர் உடன்பாட்டை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் தொடர் விளைவுகள் எப்படி என்பது போக போகத்தான் தெரிய வரும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved