சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு - தவிர்க்கமுடியாமல் தவிக்கும் மத்திய அரசு

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அனைத்து மக்களையும், அவர்களின் முக்கிய பண்புகளையும் (கல்வி, சமூகம், பொருளாதாரம்) முழுமையாகக் கணக்கிடுவதாகும். இதன் தொடக்க காலத்தில், அதாவது 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் வரிவிதிப்பு, இராணுவச்சேர்க்கை மற்றும் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்துதல் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக உரிய நபர்களை அடையாளம் காண்பதே மக்கள்தொகை கணக்கெடுப்பின் முக்கிய அம்சமாக இருந்தது.
பழைய காலத்திலிருந்த ஆய்வுகளில் அனைத்து மக்களையும் அல்லது பிரதிநிதித்துவமான மாதிரியை எண்ணும் நோக்கம் இருக்கவில்லை; அதன் பதிலாக, குடும்பத் தலைவர்கள் அல்லது படை வயதுடைய ஆண்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவிலுள்ளவர்களையே எண்ணினார்கள். இத்தகைய கணக்கெடுப்புகள் பண்டைய பாபிலோனியா, பாலஸ்தீனா, பெர்சியா, சீனா மற்றும் எகிப்தில் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை, ரோமர்கள் குடிமக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களை கணக்கிட்டு அவர்களின் கடமைகளை நிர்ணயித்தார்கள். இந்த நடைமுறை கிமு 5ஆம் ஆண்டில் முழு ரோமப் பேரரசிற்கும் விரிவுபடுத்தப்பட்டது. ரோம் வீழ்ந்த பின்னர், மேற்கத்திய நாடுகளில் இந்த நடைமுறை நவீனக் காலம் வரையிலேயே தொடரவில்லை. இதற்கான முக்கியமான விலக்கு "டோம்ஸ்டே புக்" ஆகும் — இது 1086ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு விசாரணையாகும், இது வெற்றி பெற்ற வில்லியம் தனது புதிய மன்னராட்சியின் நிலங்களையும், நிலவுடமையாளர்களையும் அறியும்படி செய்யப்பட்டது. போர்க் கொடுஞ்சூழலின் போது, ஜெர்மனியின் நியூரெம்பெர்க் நகரம் 1449ஆம் ஆண்டில் அதன் மக்களை ஒட்டுமொத்தமாக (மிகவும் முழுமையாக) கணக்கெடுத்தது.
இந்தியா நிலப்பரப்பைப் பொருத்தவரை, 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட - மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பே முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. அதன்பிறகு, லார்ட் மேயோ தலைமையில் 1872-ல், நடத்தப்பட்டாலும் அதுவும் முழுமையான கணக்கெடுப்பு அல்ல. இந்தியாவில் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது 1881-ல், லார்ட் ரிப்பன் தலைமையில் முழுமையாக நடத்தப்பட்டது. அதிலிருந்து 1931-ம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், அதில் சாதி தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பிறகு 1951 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தப்பட்டபோது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே சாதியின் பெயரால் வகைப்படுத்தப்பட்டனர். அப்போதிலிருந்து இந்திய அரசு ஒரு கொள்கை முடிவாக சாதிவாரி கணக்கெடுப்பை தவிர்த்து வருகிறது. சட்டப்படி சாதிக் கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஏனென்றால் அரசியல் சாசனம் மக்கள் தொகையை ஏற்கிறது, சாதி அல்லது மதத்தை அல்ல என்று இது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பெரும்பான்மையாகவுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கிடப்பட்டால் தங்கள் அதிகாரத்திற்கு ஆபத்து என்பதாலேயே உயர்சாதியினர் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அரசியல், நீதி மற்றும் நிர்வாக அடுக்குகளிலும், கொள்கைமுடிவெடுக்கும் இடங்களிலும் உயர்சாதியினரே குறிப்பாக பிராமணர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருப்பதால், ஏதாவதொருவகையில் எளிதாக தடைகளை ஏற்படுத்தமுடிகிறது.
பிராமணர் அல்லாத சாதியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற குரலும், கருத்தாக்கமும், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே எழாமல் இல்லை. இதன் உச்சகட்டமாக, நாடு சுதந்திரம் பெற்றபோது "அதிகாரம் வெள்ளையர்களிடமிருந்து உயர்சாதியினருக்கு கை மாறுகிறது, இதனால் மதத்தின் பெயரால் நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழும் மக்களுக்கு எவ்வித பலனுமில்லை" என்று சென்னை மாகாணத்திலிருந்து குரல்கொடுத்தார் தந்தைப்பெரியார். இதன் தொடர்ச்சியாக பிராந்தியக்கட்சிகளின் வளர்ச்சி நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய பங்கீடு என்ற கோரிக்கை அரசியல் அரங்கில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் இடஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்டதால் ஆளும் வர்க்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கமுடியாமல், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தியது அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட மன்மோகன்சிங் அமைச்சரவையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இதனையடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக 2015 ஆம் ஆண்டில் மதவாரியான கணக்கு விவரங்களை வெளியிட்ட போதும், சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடவில்லை. இந்நிலையில் 2021ல் நடந்த வழக்கு விசாரணை ஒன்றின்போது, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ”2011ல் நடத்தப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பில் பல குறைபாடுகள் உள்ளன. இதில் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தவறுகள் நிறைந்ததாகவும், பயனற்றதாகவும் உள்ளது,” என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும், 1931 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, நாட்டில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,147 ஆக இருந்தது என்றும், 2011 ஆம் ஆண்டு சாதிக் கணக்கெடுப்பிற்கு பிறகு, நாட்டில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை 46 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறியது.
2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய மத்திய அரசு, மகாராஷ்டிராவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகளின் கீழ் வரும் சாதிகளின் எண்ணிக்கை 494 என்ற நிலையில் 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிக்கணக்கெடுப்பில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,28,677 என்று கண்டறியப்பட்டதாக மத்திய அரசு குறிப்பிட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்பதே தொடக்க காலம் முதல் பாஜகவின் ஒரே நிலைப்பாடு. ஆகையால் "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது நிர்வாக ரீதியாக சிரமங்கள் நிறைந்தது" என்பதே நீதிமன்றங்களில் பாஜக அரசு தொடர்ந்து கூறி வருவது. இந்நிலையில் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அங்கம்வகித்த இந்தியா கூட்டணி "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்" என்று வாக்குறுதி வழங்கியது. அப்போது இதைக்கடுமையாக விமர்சித்த ஆளும்கட்சியான பாஜக "எதிர்க்கட்சிகள் சாதியின் பெயரால் நாட்டை பிளவு படுத்துவதாக குற்றஞ்சாட்டியது. இதில் ஒருபடி மேலாக, பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும், மத்தியப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போதும் "சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் எதிர்க்கட்சிகளை அர்பன் நக்சல் என்றும், மாவேயிஸ்ட் தீவிரவாதிகள்" என்றும் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று (30.04.2025) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் . இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பெகல்ஹாம் தீவிரவாத தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 28 பேர் கொல்லப்பட்டு நாடே கொந்தளிப்பான நிலையில் இருக்கும் சூழலில், மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் பெகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தனது கொள்கை நிலைப்பாட்டிற்கும், தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் நிலைக்கும் நேரெதிராக 'சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு' என்ற அஸ்திரத்தை கையிலெடுத்திருப்பது பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை பலரும் வரவேற்றிருந்தாலும், பலவிதமான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர். உண்மையிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்திருக்கும்பட்சத்தில் கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருக்கலாம். அதேபோல் தற்போது அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? எப்போது நிறைவுபெறும்? என்பது குறித்தோ, நிதி ஒதுக்கீடு குறித்தோ எந்தவித விவரமும் சொல்லப்படவில்லை.
பகல்ஹாம் தாக்குதலை திசைதிருப்புதல், பீகார் மாநிலத் தேர்தல் என பலவகைக் காரணங்களை எதிர்க்கட்சிகள் கூறினலும், ஆளும் கட்சி தனது கொள்கைக்கு நேரெதிரான முடிவை எடுத்து பொதுமக்களுக்கு அறிவித்துவிட்ட நிலையில், காலம் தாழ்த்தியாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தவிர, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு 50 சதவீத வரம்பை நீக்கவேண்டும் என்று கூறிவருவது இதரபிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு வரம்பு 27 சதவீதத்திலிருந்து உயரும் நாளும், கிரிமிலேயர் அகற்றப்படும் நாளும் வெகுதூரமில்லை என்றே தெரிகிறது.