இனி அமெரிக்க டாலர் வேண்டாம் - பாடம் கற்றுக்கொண்ட உலக நாடுகள்!
சமீப காலங்களில் இந்திய உள்ளிட்ட உலக நாடுகள் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு தங்கள் சொந்தக் கரன்சியை அல்லது டாலர் அல்லாத மாற்று கரன்சியை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியாவதுண்டு. இதுவரை வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் பயன்படுத்தி வந்த நாடுகளுக்கு அதன் மீது திடீர் பயம் ஏன் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
De-dollarization ஏன் உலக நாடுகளுக்கு, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமானது?
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை புரிந்து கொள்ள ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நூறு வீடுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வீட்டுக்காரரும் தங்கள் வீட்டைப் பூட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த எல்லா வீடுகளின் கதவுகளையும் திறக்கக்கூடிய ‘Master Key’அல்லது ஒற்றைச் சாவி மட்டும் அந்த குடியிருப்பின் மேலாளரான அமெரிக்காவிடம் இருக்கிறது.
நீங்கள் உங்கள் வீட்டில் அமைதியாக வாழ்ந்தாலும், ஒருநாள் மேலாளருக்கு உங்கள் செயல் பிடிக்கவில்லை என்றால், அவர் உங்கள் வீட்டின் கதவை வெளியிலிருந்து பூட்டிவிட முடியும். உங்கள் சொந்த வீட்டிற்குள் இருக்கும் உணவையோ, பணத்தையோ உங்களால் எடுக்க முடியாது.
இதுதான் இன்று உலகப் பொருளாதாரத்தில் நடக்கிறது.
அமெரிக்கா தனக்குக் பிடிக்காத நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும்போது, அந்த நாடுகள் சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாமல் போகிறது.
உதாரணமாக, ரஷ்யா அல்லது ஈரான் போன்ற நாடுகள் தங்கள் சொந்த எண்ணெய் அல்லது பொருட்களை விற்றாலும், அதற்கான பணத்தை டாலரில் பெற முடியாமல் அமெரிக்கா தடுத்து விடுகிறது.
இது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல்.
அமெரிக்கா தனது நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தினால், அதன் தாக்கம் இலங்கையில் உள்ள பெட்ரோல் விலை வரை எதிரொலிக்கும். நாம் ஏதும் செய்யாமலேயே, டாலரின் மதிப்பு உயர்வதால் நமது நாட்டு நாணயத்தின் (ரூபாய்) மதிப்பு குறைகிறது. நமது பொருளாதாரத்தின் தலைவிதி அந்நிய நாட்டின் கைகளில் இருப்பதைத் தவிர்க்கவே ‘ Dedollarisation ' அவசியமாகிறது.
மத்திய கிழக்கில் நடக்கும் போர்களை நாம் வெறும் ஏவுகணைகள் மற்றும் ஆயுதக் குழுக்களின் மோதலாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால், நவீன காலத்தின் மிகக்கொடிய போர்முனை என்பது ஒரு நாட்டின் வங்கிக் கணக்கு என்பதை அமெரிக்கா உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
2003-ம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்த அமெரிக்கா, அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகக் கூறி, அந்த நாட்டின் பொருளாதாரத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஒரு நாட்டின் இறையாண்மை என்பது அதன் ராணுவத்தில் மட்டுமல்ல, அதன் பண இருப்பிலும் இருக்கிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஈராக்கின் ஒட்டுமொத்த எண்ணெய் வருவாயையும் நியூயார்க்கில் உள்ள 33 Liberty Street ல் உள்ள வங்கி கணக்கு பெட்டகத்திற்குள் சிறைபிடித்து வைத்துள்ளது.
ஈராக், ஓபெக் (OPEC) அமைப்பில் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர். மாதத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதிக்கிறார்கள். ஆனால், 2003 அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிறகு அமைக்கப்பட்ட நிதி கட்டமைப்பின் காரணமாக, ஈராக் ஒரு பரல் எண்ணெயை உலகின் எந்தப் பகுதிக்கு விற்றாலும், அந்தப் பணம் நேரடியாகப் 'பாக்தாத்' (Baghdad) க்குப் போகாது. ஆனால், அந்த எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு டாலரும் சர்வதேச ஆணைப்படி ஈராக் மத்திய வங்கிக்குச் செல்வதற்குப் பதிலாக, அமெரிக்காவின் Federal Reserve Bank of New York நேரடியாகச் செல்கிறது. அதாவது, ஈராக்கின் மொத்த இறையாண்மைச் செல்வத்தையும் அமெரிக்கா தனது பெட்டகத்தில் வைத்துள்ளது.இது ஏதோ தற்காலிக ஏற்பாடு அல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் ஆக்கிரமிப்பிற்குப் பிந்தைய சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நிரந்தர நிதிச் சதி.
ஈராக் அரசாங்கம் தனது சொந்த குடிமக்களுக்குச் சம்பளம் கொடுக்கவோ, தனது ராணுவத்திற்கு நிதியளிக்கவோ அல்லது அதன் பொருளாதாரம் சீர்குலையாமல் தடுக்கவோ வேண்டுமானால், ஈராக் மத்திய வங்கி வாஷிங்டனிடம் "எங்கள் பணத்தைத் தாருங்கள்" என்று முறையாகக் கோரிக்கை விடுக்க வேண்டும். கையேந்த வேண்டும்.
அமெரிக்கா மாதந்தோறும் காகிதப் பணங்களை (Physical Cash) விமானத்தில் ஏற்றி பாக்தாத்திற்கு அனுப்புகிறது. இதில் உள்ள மிகப்பெரிய அரசியல் என்னவென்றால், ஈராக் எப்போது அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக நடக்கிறதோ, அப்போது இந்தப் பண விநியோகம் "தொழில்நுட்பக் காரணங்களைக்" காட்டி நிறுத்தப்படும் அல்லது தாமதப்படுத்தப்படும்.இது ஒரு நாட்டின் செல்வத்தை அந்நாட்டிற்கே தெரியாமல் பிணைக்கைதியாக வைத்துள்ள ஒரு நவீன காலத்து கபட நாடகம். இது ஈராக்கைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, இது ஈரானுக்கு எதிரான கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக பாவிக்கின்றனர்.
ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் இருப்பதால், அவர்களின் பொருளாதாரம் இயங்க அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. ஈராக் வழியாக இந்த அமெரிக்க டாலர்களை எல்லை தாண்டித் திருட்டுத்தனமாகத் தனது நாட்டிற்குள் கொண்டு வர ஈரான் பல ஆண்டுகளாக ஒரு நிழல் நிறுவனங்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. வாஷிங்டனுக்கு இது நன்றாகத் தெரியும். இங்கேதான் உண்மையான போர் தொடங்குகிறது. ஈரான் ஆக்ரோஷமாகச் செயல்படும்போது, அமெரிக்கா ஏவுகணைகளை ஏவுவதில்லை. அவர்கள் Federal Reserve வங்கிக்குள் நுழைந்து, பணப் பரிமாற்ற விதிகளை (Wire transfer rules) இறுக்குகிறார்கள். பணத்தை ஏற்றிச் செல்லும் விமானங்களை அமெரிக்கா நிறுத்துகிறது. சில நாட்களில், ஈராக் தினார் (Dinar) மதிப்பு வீழ்கிறது. Baghdad வீதிகளில் போராட்டங்கள் வெடிக்கின்றன. ஈரானின் நிழல் பொருளாதாரம் உடனடியாக மூச்சுத்திணறுகிறது.
ஒருபுறம் அதன் அண்டை நாடான மற்றும் மத ரீதியான பிணைப்பு கொண்ட ஈரான், மறுபுறம் அதன் பணங்களை வைத்திருக்கும் அமெரிக்கா. ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டால், அமெரிக்கா டாலர் விநியோகத்தைக் குறைக்கும். உடனே ஈராக்கில் பணவீக்கம் (Inflation) அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். ஈராக்கின் டாலர் புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரானின் கறுப்புச் சந்தை வர்த்தகத்தை அமெரிக்கா தனது விரல் நுனியில் வைத்துள்ளது.
ஒரு ஏவுகணையைக்கூட ஏவாமல், வெறும் ஒரு வங்கி உத்தரவின் மூலம் ஈராக்கின் பண மதிப்பை வீழ்த்தி, அங்கு மக்கள் புரட்சியைத் தூண்டி, அதன் மூலம் ஈரானின் நிழல் பொருளாதாரத்தை அமெரிக்காவால் மூச்சுத்திணற வைக்க முடிகிறது. இது போர் வீரர்களைக் கொல்லாமல், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தையும் ஏழ்மைக்குத் தள்ளும் ஒரு நுணுக்கமான பொருளாதார ஆயுதம். அமெரிக்காவின் இந்த "நிதிச் சர்வாதிகாரம்" (Financial Dictatorship ) உலக நாடுகளுக்கு ஒரு தெளிவான பாடத்தைக் கற்பித்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் டாலரை மட்டுமே நம்பியிருந்தால், அந்த நாட்டின் இறையாண்மை என்பது எப்போதும் வாஷிங்டனின் கைகளில் இருக்கும் ஒரு கொத்தடிமை போல இருக்கும். ஈராக்கின் செல்வம் நியூயார்க்கில் சிறைபிடிக்கப்பட்டிருப்பது போல, நாளை எந்தவொரு நாடும் தனது சொந்தப் பணத்திற்காக அமெரிக்காவின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டிய நிலை வரலாம். இந்த அச்சுறுத்தலே இன்று உலகெங்கும் 'De-dollarization’ எனும் புதிய பொருளாதாரப் புரட்சிக்கு வித்திட்டுள்ளது.
ஒரு நாடு தனது பாதுகாப்பிற்காக மற்றொரு நாட்டின் நாணயத்தையே முழுமையாக நம்பியிருப்பது அந்த நாட்டின் சுதந்திரத்தை அடைமானம் வைக்கும் செயல். இதிலிருந்து விடுபடவே De-dollarisation என்பது உலக நாடுகளுக்கு அவசியமானது.
உண்மையில் அமெரிக்காவின் இந்த நிதிச் சர்வாதிகாரம் நிரந்தரமானது அல்ல. வரலாறு உணர்த்தும் உண்மை என்னவென்றால், எந்தவொரு சாம்ராஜ்யமும் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போது, அதற்கான மாற்று வழிகள் தானாகவே உருவாகும். ஒட்டு மொத்த நிதிகளை கைக்குள் வைத்திருப்பதன் மூலம் உலகத்தை ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவின் கபடத்தனம், உண்மையில் டாலரின் வீழ்ச்சிக்கே வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.
இனிவரும் காலம் என்பது ஒற்றைப் பணத்தின் ஆதிக்கமாக இருக்காது; அது பல நாடுகளின் நாணயங்கள் சரிசமமாக மதிக்கப்படும் ஒரு பன்முனைப் பொருளாதாரமாக (Multipolar Economy) அமைய போகின்றது.
உலகம் முழுவதும் பரவி வரும் இந்த விழிப்புணர்வு, எதிர்காலத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டைப் பணத்தை வைத்து மிரட்ட முடியாத ஒரு சமநிலையான உலகத்தை உருவாக்க வேண்டும்.
நன்றி: முகிந்தன்.

