🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசனாக பிறந்து முனிவரான விசுவாமித்திரர்!

மிகப் பெரிய முனிவரான விசுவாமித்திரர் ஆரம்பகாலத்தில் அரசனாகவே வாழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு ஒளிந்துள்ளது. அதை ஒரு கதை போல விவரித்துள்ளார் வியாசர். இதோ அந்த கதை.

காதி என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு ஆண் குழந்தை ஏதும் இல்லை. ஆனால் ஒரு அழகிய மகள் இருந்தால். அவள் பெயர் சத்யவதி. காலங்கள் உருண்டோடின, சத்யவதி திருமண வயதை அடைந்தாள். நர்குணங்களையும் அழகையும் ஒருங்கே பெற்ற அவளை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று விரும்பினான் காதி. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினான். அந்த சமயம் அரசனை தேடி ஒரு முனிவர் வந்தார். அவர் பெயர் ரிசீகர்.

அரண்மனைக்கு வந்த ரிசீகர் சத்யவதியின் அழகையும் நர்குணங்களையும் கண்டு வியந்தார். அவளை மனம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

ஒரு நாள் முனிவரை அழைத்து, ஐயா எனக்கு உங்களிடம் சிறிய வேண்டுகோள் ஒன்று உள்ளது. அதை நீங்கள் நிறைவேற்றினால் என் மகளை உங்களுக்கு மணம்முடித்து தருகிறேன் என்றான் அரசன். அது என்ன வேண்டுகோள் என்றார் முனிவர். ஒரு காது கருப்பாகவும் உடல் முழுவதும் வெள்ளையாகவும் உள்ள 1000 குதிரைகளை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். அரசனின் வேண்டுகோளை ஏற்று குதிரைகளோடு வருவதாகக் கூறி சென்றார் முனிவர். இது போன்ற 1000 குதிரைகளை முனிவர் எங்கு தேடி கண்டுபிடிப்பார். அவரால் அதை தரவே முடியாது. ஆகையால் அவர் சத்தியவதியை மணக்கும் விருப்பத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான் அரசன்.

இதற்கிடையில் ரிசீகர் முனிவர் தன்னை மணக்க விரும்புகிறார் என்ற செய்தி சத்யவதியின் காதுகளுக்கு எட்டியது. அவளும் முனிவரை மணக்க விருப்பம் உடையவளாகவே இருந்தாள். அரசனின் வேண்டுகோளை பூர்த்திசெய்ய முனிவர் வருணபகவானிடம் வேண்டினார். வருணபகவானும் அவர் கேட்டதுபோல 1000 குதிரைகளை தந்தருளினார். அதை அரசனிடம் ஒப்படைத்தார் முனிவர். இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. ஆகையால் தன் மகளை ரிசீகர் முனிவருக்கு மனம் முடித்து கொடுத்தார்.

ரிசீகரும் சத்யவதியும் நல்ல ஒரு தம்பதிகளாகவே வாழ்ந்துவந்தனர். ஒருநாள் ரிசீகர் சத்யவதியை அழைத்து, நான் உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன் என்ன வேண்டுமோ கேள் என்றார். தன் கணவன் தன் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பை கண்டு சத்யவதி மனம் மகிழ்ந்தாள். சுவாமி, நான் எனக்கான வரத்தை பிறகொரு நாள் கேட்கலாமா என்றாள் சத்யவதி. ரிசீகரும் அதற்கு சம்மதித்தார்.

ஒருநாள் சத்யவதி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கு தாயும் மகளும் அனைத்து விஷயங்களை பற்றியும் பேசினர். அப்போது சத்யவதி, தன் கணவர் தனக்களித்த வரம் குறித்து தன் தாயிடம் தெரிவித்தாள். என்ன வரம் கேட்க போகிறாய் என்றாள் அவள் தாய். எனக்கான ஆசைகள் இருக்கட்டும், உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள் அம்மா நான் அதை என் கணவரிடம் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. உடனே அந்த தாய் வெட்கத்தோடு தனக்கொரு ஆண் மகம் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாள். சில மணி நேரங்களுக்கு பிறகு சத்யவதி தன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் இல்லத்தை அடைந்தாள்.

அடுத்தநாள் ரிசீக முனிவரிடம் தனக்கான வரம் குறித்த பேச்சை தொடங்கினாள் சத்யவதி. முனிவரும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார். சுவாமி எனக்கொரு மகன் வேண்டும் என்றாள். அருமை, இதை தான் நீ கேட்பாய் என்று நான் எண்ணினேன் என்றார் முனிவர். சுவாமி, என் தாய்க்கும் ஒரு மகன் வேண்டும் என்றாள் சத்யவதி. அப்படியே ஆகட்டும் என்று கூறிய முனிவர் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின் இரு பிரசாதங்களை அவர் சத்யவதியிடம் கொடுத்தார். ஒரு பிரசாதத்தை குறிப்பிட்டு இதை நீ உண்ணவேண்டும் மற்றொன்றை உன் அன்னை உண்ணவேண்டும். அடுத்த நாள் இருவரும் குளித்து விட்டு நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்ற வேண்டும் என்றார்.

இரண்டு பிரசாதங்களையும் எடுத்துக்கொண்டு சத்யவதி தன் தாயை சந்திக்க சென்றாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தாள். சில நொடிகள் யோசித்த சத்யவதியின் தாய், நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது சத்யவதி, பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆகையால் நீ உண்ணவேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ உண்டுவிடு. மரத்தையும் அதற்கேற்றாற்போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம். எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காக இதை நீ செய்வாயா என்றார். சத்யவதியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் உண்டுவிட்டு மரத்தையும் மாற்றி சுட்டனர்.

சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர், பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி, நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும், உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்றல்லவா நான் பிரசாதம் அளித்தேன்.

இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி உண்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணனுக்கு உரிய குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்க விரும்புவான். உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறான் என்றார். இதை கேட்டு அதிர்ந்த சத்யவதி, நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி என கதறி அழுதாள்.

மனம் மாறிய முனிவர், ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்கப்பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான், அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved