🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இல்லையென்னாது கேட்டதை கொடுத்த - இயற்பகை நாயனார்!

சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) வணிகர் குலத்தில் அவதாடம் செய்தவர் இயற்பகை நாயனார். இவருக்கு இயற்கைலேயே தாய், தந்தையர் வைத்த பெயர் என்ன என்பது யாருக்குமே தெரியாது போனதற்கு காரணம் என்ன என்றால் இயற்கைக்கு பகையாக இவர் நடந்து கொண்ட காரணத்தினால் இவருக்கு இயற்பகை என்று பெயர் வந்தது.

இயற்பகை நாயனார் தன்னுடைய வணிகத் திறத்தால் பெரும் செல்வந்தராக விளங்கினார். இவர் சிவபெருமானிடத்தில் பேரன்பு கொண்டிருந்தார். சிவனிடத்தில் கொண்டிருந்த அன்பினால் சிவனடியவர்களைப் பேணுவதை பெரும் பேறாகக் கருதினார். இதனால் அவ்வடியார்கள் அவரிடம் இருக்கும் எதை வேண்டினாலும், அதை தயங்காது வழங்கி வந்தார். இயற்பகையாரின் மனைவியார் கணவனைக் கண் கண்ட தெய்வமாகக் கருதுபவர். கற்பில் சிறந்த அப்பெண்மணி, இயற்பகையாரோடு இணைந்து சிவனடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து வந்தார். 

சிவனார் இயற்பகையாரின் பற்றற்ற கொடை திறனை உலகுக்கு வெளிப்படுத்த விருப்பம் கொண்டார். ஆதலால் திருநீறு அணிந்த வேதியர் வேடம் கொண்டு இயற்பகையார் வீட்டிற்கு வந்தார். சிவனடியாரைக் கண்ட இயற்பகை நாயனார் அவரை அன்புடன் வரவேற்றார். உரிய ஆசனத்தில் அமர வைத்து வழிபாடு செய்து இன்னமுது படைத்தார். பின் சிவனடியார் தன்னுடைய வீட்டிற்கு வந்தது தான் செய்த பாக்கியம் என்று மனமகிழ்ச்சியோடு கூறினார்.

அதனைக் கேட்டதும் “சிவனடியவர்கள் விரும்பும் பொருட்களை இல்லை எனாது நீ வழங்குவாய் என்பதைக் கேள்விப்பட்டே யாம் இங்கு வந்துள்ளோம். எம்முடைய விருப்பப் பொருளை நீ தர சம்மதித்தால் அதனைப் பற்றித் தெரிவிப்போம்” என்றார் வேதியர். “என்னிடத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் இறைவனின் கொடையே. அதனை நான் சிவனடியார்களுக்கு எப்போதும் மனநிறைவுடனே அளித்து வருகிறேன். ஆதலால் தாங்கள் தம்முடைய விருப்பத்தை தெரிவிங்கள்” என்றார் இயற்பகையார்.

மனைவிடம் சென்று நடந்தவைகளைக் கூறினார். அதனைக் கேட்ட அப்பெண்மணி அதிர்ச்சியடைந்தாலும், கணவனின் வார்த்தையைப் பின்பற்றுவதே தனது கடமை என்று எண்ணி அவ்வேதியருடன் உடன் செல்ல சம்மதித்தார். வேதியருடன் புறப்படத் தயார் ஆனார்.

அப்போது வேதியர் இயற்பகையாரிடம் “உன்னுடைய மனைவியை நீ எனக்கு பணிவிடை செய்ய அனுப்பி வைக்க சம்மதித்துவிட்டாய். ஆனால் உன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஆதலால் நான் உமது மனைவியுடன் இவ்வூரைக் கடக்கும் வரை எமக்கு பாதுகாப்பு அளிப்பாய்” என்றார். “அவ்வாறு செய்வது என்னுடைய பாக்கியம்” என்று கூறி கையில் வாளினைக் கொண்டு போர்க்கோலம் பூண்டார் இயற்பகையார்.

வேதியரும், மனைவியாரும் முன்னே செல்ல அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார் இயற்பகை நாயனார். நடந்தவைகளை அறிந்த இயற்பகையார் மற்றும் அவருடைய மனைவியின் உறவினர்கள், ஊர்மக்கள் வேதியரை தடுத்தனர். அப்போது அவர்கள் “உன்னுடைய மனைவியை இக்கிழவேதியருடன் அனுப்பி அவர்களுக்கு காவலாக வேறு உடன் செல்கிறாயே. உனக்கு புத்தி கெட்டுப் போய்விட்டதா?” என்று கேட்டனர்.

“நீ செய்யும் செயலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றபடி வேதியரைத் தாக்க முன்னோக்கி விரைந்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வாளால் வெட்டி வீழ்த்தினார். சிலர் இயற்பகையாருக்கு பயந்து அவ்விடத்தில் இருந்து ஓடினர். பின்னர் இயற்பகையார் வேதியர் மற்றும் தன் மனைவியோடு திருச்சாய்க்காடு என்னும் இடத்திற்கு வந்தார். அப்போது சிவனடியார் இயற்பகையாரிடம் “இனி உன் துணை எனக்குத் தேவையில்லை. நீ திரும்பிச் செல்லலாம்” என்று கூறினார்.

இயற்பகையார் சிவனடியாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி விடைபெற்றார். சிறிது தூரம் சென்ற பிறகு “இயற்பகையே, காப்பாற்று காப்பாற்று” என்று வேதியர் கத்தும் சத்தம் இயற்பகையாருக்குக் கேட்டது. “ஆபத்து ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா? இதோ வந்துவிட்டேன்.” 

என்றபடி கையில் வாளை உயர்த்தியவாறு சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடினார். அவ்விடத்தில் வேதியரைக் காணவில்லை. இயற்பகையாரின் மனைவியார் மட்டுமே நின்றிருந்தார். இருவருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. அப்போது காளை வாகனத்தில் உமையம்மையுடன் சிவனார் காட்சியளித்தார். இயற்பகையாரும், அவரது மனைவியும் பிறவிக்கடல் கடந்து சிவனடியில் சேர்ந்தனர். இயற்பகையாரின் வாளுக்கு இரையானவர்களும் சிவலோகத்தை அடைந்தார்கள்.

இயற்பகை நாயனார் குருபூஜை மார்கழி உத்திரம் நாளில் கொண்டாடப்படுகிறது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved