மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் சாதித்த சுதர்ஷனா!

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் அருகேயுள்ள வள்ளிபுரம் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமம் தொட்டிவலவு. இராஜகம்பளத்தார்கள் மட்டுமே வசிக்கும் இக்கிராமத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு நமது சமுதாயத்தைச் சேர்ந்த திரு.ரகுபதி என்பவர் சிவில் இஞ்சினியரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்று, பெருந்துறையிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு யமுனா தேவி என்ற மனைவியும், சுதர்சனா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
சுதர்சனா செங்கப்பள்ளியிலுள்ள ஸ்ரீகுமரன் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறார். குழந்தைப் பருவத்திலிருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள சுதர்சனாவை பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தனர். இதன் காரணமாக மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடிவந்தாள். இளம் வயதில் சாதனை புரிந்துவரும் சுதர்சனாவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் மற்றும் பல தன்னார்வ அமைப்புகள் நேரில் அழைத்து பாராட்டி, பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று (மார்ச் 2-ஆம்தேதி) திருப்பூர் ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக் பள்ளியில், கிங்ஸ் செஸ் அகாடமி, தாராபுரம் செஸ் அகாடமி, திருப்பூர் மாவட்ட சதுரங்க கழகம் ஆகியவற்றின் சார்பில் 9,12,15 வயதிற்குற்பட்டோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலம் முழுவதிலுமிருந்து 350 பேர் பங்கேற்றனர். 12-வயதிற்குட்பட்டோர் ஓபன் பிரிவில் (ஆண்- பெண் இருபாலர் பிரிவு) சுதர்சனா பங்கேற்றார். இப்பிரிவில் சுதர்சனாவுடன் 66 பேர் போட்டியிட்டனர். ஏழு ரவுண்ட்களாக நடைபெற்ற இப்போட்டியில் 6 புள்ளிகள் பெற்று மாதேஷ் பாலாஜி முதலிடமும், அதிலேஷ், சுதர்சனா ஆகியோர் 5.5 புள்ளிகள் எடுத்து சமநிலை பெற்றனர். இதனையடுத்து சர்வதேச செஸ் விதிகளின்படி முந்தைய ஆட்டங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு சுதர்சனா மூன்றாமிடம் பிடித்தார்.
ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனிப்பிரிவுகள் இருந்தும், திறமையை வளர்க்கும் நோக்கில் 66 பேர்கள் கலந்துகொண்ட ஓபன் பிரிவில் துணிச்சலுடன் பங்கேற்று ஆண் போட்டியாளருக்கு இணையாக 5.5 புள்ளிகள் எடுத்து ஆணுக்குப் பெண் சளைத்தவர்களல்ல என்பதை சுதர்சனா நிரூபித்துக்காட்டினார். இதனையடுத்து மாநில அளவில் வெற்றிவாகை சூடிய சுதர்சனாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.