🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இரண்டில் வெற்றி என்றாலும் இலக்கு வேறு என்கிறார் கௌதம் செல்லமுத்து!

அரசு வேலை என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. ஆகையால் அரசுப்பணிக்கான எந்தத்துறையில் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் என்றாலும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அரசு வேலை என்ற கனவுகளோடு தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தேர்வு எழுதி எழுதி வெற்றியின் அருகில்கூட வரமுடியாமல் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டவர்கள் மத்தியில், தேர்வெழுதிய இரண்டிலும் வெற்றிபெற்று கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்துள்ளார் ஒரு இளைஞர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் தொட்டிபாளையம் கிராமத்தைச் செ.கௌதம் ஒரே ஆண்டில் குரூப் 2ஏ மற்றும் குரூப்4 ஆகிய இரண்டு தேர்விலும் வெற்றிபெற்றுள்ள நிலையில்  குரூப்1 தேர்வில் வெற்றிபெறுவதே லட்சியம் என்கிறார் எஸ்.கௌதம். இதன் விவரம் பின்வருமாறு,

நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை உறுப்பினரும், பரமத்தி வேலூர், தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவருமான திரு.செல்லமுத்து - திருமதி.யோகேஸ்வரி ஆகியோரின் அன்புமகனும், பொறியியல் பட்டதாரியுமான செ.கௌதம் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 A தேர்வில் வெற்றி பெற்று  கூட்டுறவு (துறை) சங்கங்களின் முதுநிலை ஆய்வாளராக (Senior Inspector in Co - Operative Department) பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்ற கௌதம், குடிசை மாற்று வாரியத்தில் பில் கலெக்டராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த ஏப்ரல் மாதம் பணிநியமனம் செய்யப்பட்டார். குரூப்1 தேர்வில் வெல்வதையே லட்சியமாகக் கொண்டு கடினமாக உழைத்துவரும் கௌதம், குரூப்2ஏ தேர்வையும் எழுதியிருந்தார். இதன்முடிவுகள் சமீபத்தில் வெளியானதில் கௌதம் குரூப்2ஏ தேர்விலும் வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து கடந்த 28 ஆம் தேதி நடந்த கலந்தாய்வில் கௌதமுக்கு கூட்டுறவுத்துறையில் வேலை ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் பில் கலெக்டர் என்ற அந்தஸ்திலிருந்து சீனியர் இன்ஸ்பெக்டர் என்ற அந்தஸ்துக்கு உயர்கிறார்.  

கௌதமின் இந்த சாதனைக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடின உழைப்புக்கு உதாரணமாக விளங்கும் கௌதமின் இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிகள் வசமாகட்டும் என தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved