முதலமைச்சர் தலைமையில் சுயமரியாதை திருமணம்! கம்பளத்தார் சார்பில் நேரில் வாழ்த்து!
பிரபல எழுத்தாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான சூர்யா சேவியர் இல்ல திருமண விழா இன்று காலை சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் பெரியார் திடலில் அமைந்துள்ள நடிகவேள் எம் ஆர் இராதா மன்றத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்க்ளுக்கு சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். இது பற்றிய விவரம் வருமாறு,
இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளரும், ஊடக விவாதங்களில் பங்கேற்று மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் ஆகியோரின் சிந்தனைகளை பொதுச்சமூகத்திடம் கொண்டுசேர்ப்பவருமான சூர்யா சேவியர். சமீபத்தில் வெளியான இவரின் காவிரி நீரோவியம் அனைவரின் கவனத்தைப்பெற்றது. இவரது மகள் டாக்டர்.சுஜி - டாக்டர் அஜித்குமார் ஆகியோர் இணையேற்புவிழா இன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி மூத்ததலைவர் ஆர்.நல்லக்கண்ணு, நடிகர் சத்தியராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு, சு.ப.வீரபாண்டியன்,இராஜீவ்காந்தி, மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பிரபல எழுத்தாளர்கள் எஸ்.ஏ.பெருமாள், பாரதி கிருஷ்ணகுமார், பாடலாசிரியர் யுகபாரதி, பத்திரிக்கையாளர்கள் சன் டிவி குணசேகரன், விஜயசங்கர், ஆழி செந்திநாதன், டாக்டர்.ஷர்மிளா மற்றும் முன்னனி யூடியூப் சேனல் பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சுயமரியாதை முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்தில் தமிழக முதல்வர் மணமக்களுக்கு மாலை எடுத்துக்கொடுக்க, நடிகர் சத்தியராஜ் உறுதிமொழி வாசிக்க அதை மணமக்கள் ஏற்றுக்கொண்டு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திருமணத்திற்கான சாட்சிப்படிவத்தில் தமிழக முதல்வர், நல்லக்கண்ணு, சத்தியராஜ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
இத்திருமண விழாவில் சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு இராஜகம்பளத்தார் சார்பில் மணமக்களை வாழ்த்தினர்.