சமூக நீதி பேரணியில் உளவுத்துறையை வியக்கவைத்த கம்பளத்தார் கூட்டம்!
115 எம்.பி.சி சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் முதல் போராட்டமான "சமூகநீதி முழக்க பேரணி" இன்று காலை சென்னை, கிண்டி சின்னமலையில் மிகுந்த எழுச்சியுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
காவல்துறையின் மிகக்கடுமையான கட்டுப்பாடுகளுக்கிடையே நடைபெற்ற இப்பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு சமூகங்களின் சார்பில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
குறுகிய காலத்தில் பல சமுதாயங்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட இப்பேரணிக்கு சுமார் ஐந்தாயிரம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஏழாயிரம் பேர்வரை திரண்டது கூட்டமைப்பினருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியது.
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல், திருப்பூர்,சேலம்,கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்டோர் நான்கு பேருந்து. ஒரு டெம்போ டிராவலர் மற்றும் கார்களில் வந்திருந்தனர். விடுதலைக்களம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை மற்றும் த.வீ.க.பண்பாட்டுக்கழகம் ஏற்பாட்டில் திருப்பூர் இராமசாமி, உலிப்புரம் முருகேசன் ஆகியோர் ஒத்துழைப்புடன் சென்னைக்கு வாகனங்கள் அணிவகுத்து வந்ததை சென்னைக்கு அருகே பெருங்களத்தூரில் வாகனங்களை கணக்கெடுத்துக்கொண்டிருந்த "உளவுத்துறை" பெண் அதிகாரி ஒருவர், ஒரே சமுதாயத்திலிருந்து இத்தனை பேரா? என்று வியந்து பாராட்டிச்சென்றார். அதேபோல் வீ.க.பொ.இராஜகம்பள நிர்வாகிகளை தொடர்புகொண்டு உளவுத்துறையினர் விசாரித்தபடியே இருந்தனர்.
அதேபோல் சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம், சுந்தரராஜன், சுப்பிரமணி, மண்டலப்பொறுப்பாளர்கள் முகப்பேர் ராஜா, லிங்கராஜ், குருசங்கர் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் சார்பில் தலைவர்.இராதாகிருஷ்ணன், கந்தவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், இராஜகம்பள (தொட்டிய நாயக்கர்) மகாஜனசங்கம் சார்பில் பொதுச்செயலாளர் பிச்சைக்கனி உள்ளிட்ட நிர்வாகிகள், போடி நாயக்கனூர் சௌந்திரபாண்டி ஏற்பாட்டில் விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.