செப்'17 -இல் பறிக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுப்போம்!
சமூகநீதிக்காக தன் இறுதி மூச்சு நிற்கும்வரை போராடி, இரண்டாயிரம் கால அடிமை வரலாற்றை அடியோடு புரட்டிப்போட்டு, தமிழக மண்ணில் சமூகநீதிக்கு வித்திட்ட தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர்-17 ஆம் தேதியை "சமூகநீதி" நாளாக கடைபிடிக்கப் போவதாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை 115 சமூகங்களை உள்ளடக்கிய சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தொட்டிய நாயக்கர் சமூகம் முழுமையாக வரவேற்கிறது. அதேவேளையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் ஒருசாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை வெளியிட்டு 115 சமூகங்களுக்கு அநீதியை திமுக அரசு இழைத்துள்ளது. 115 சமுதாயங்கள் தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்து தங்கள் குறைகளை எடுத்துரைக்க முயற்சி செய்தும் இதுவரை செவிசாய்க்கவில்லை. 115 சமூகங்களிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லை என்றும், இச்சமூகங்களின் ஒட்டுமொத்த வாக்குகள் வன்னியர் சமுதாய வாக்குகளில் பத்தில் ஒருபங்கு மட்டுமே என்று அரசியல் கட்சிகள் நினைப்பதே, நம்மை கிள்ளுக்கீரையாக நினைப்பதற்கு காரணம்.
குரலற்ற மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு சமூகநீதி வழங்குவதே தந்தை பெரியாரின் சமூகநீதி. பெரும்பான்மை சமூகத்திற்கு குரலற்ற சமூகங்களின் உரிமைகளை அதிகாரப்பசிக்காக பறித்துக்கொடுக்கும் வேலையை செய்வதல்ல தந்தை பெரியார் கண்ட சமூகநீதி. எனவே அரசு அறிவித்துள்ள இந்த போலி சமூகநீதிநாளை புறக்கணித்து உண்மையான சமூகநீதியை மீட்டெடுத்து தந்தை பெரியாருக்கு அற்பணிக்கும் வகையில் அவரின் பிறந்தநாளை அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.