என்ன கொடுமை இது சரவணா? கமுதியில் அல்லல்படும் கம்பளத்து மாணவ கண்மணிகள்!
தமிழகத்திலேயே கம்பளத்தார் சமுதாயத்திற்கு மிக அதிகமாக ஐந்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும், ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களும் இருக்கும் ஒன்றியம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி ஒன்றியம். இதில் ஏறக்குறைய அனைவருமே ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு DNT சான்றிதழ் பெற தகுதியான மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. இந்த ஒன்றியத்திலுள்ள நீராவி கரிசல்குளம் கிராமத்து மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு DNT சான்றிதழை பெற்றிருந்தனர். ஒருசில நாட்களுக்குப்பின் அது நிறுத்தப்பட்டது. தற்பொழுது பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் DNT சான்றிதழ் கோரும் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவர்களின் மனு உரிய காரணமின்றி நிராகிக்கப்பட்டு வருகிறது.இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் விசாரிக்கையில் தங்களிடம் யாரும் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை என்று பதில் அளிக்கின்றனர். அதிக படிப்பறிவும், வெளிவட்டாரத்தொடர்பும் இல்லாத மாணவர்களும், பெற்றோர்களும் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதை காணமுடிகிறது. அடித்தட்டு மக்களோடு ஒன்றியிருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கே மக்களின் பிரச்சினை என்ன என்று தெரியாமல் இருப்பது அரசியலில் அவர்களின் வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் பயன்படாது என்பதை உணர்ந்து செயல்படுவது சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும். எனவே இனிமேலாவது உள்ளாட்சி பிரதிநிகள் மாவட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவிட வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.