இடஒதுக்கீட்டில் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் சமூகநீதி கூட்டமைப்பு வேட்பாளர்கள்!
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பிற 115 சமுதாயங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவு, கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அல்லோகலப்பட்டு வருகின்றனர். இது தவிர அரசு பணிஇடங்களிலும் நியமனம் கிடைக்காமல் ஏராளமான வாய்ப்புகள் பறிபோகிறது. இந்த பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்த 115 சமுதாயங்கள் இணைந்து இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்தே பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அரசு பாராமுகமாக இருப்பதால் மக்களிடம் இந்த இடஒதுக்கீட்டின் பாதிப்பை விளக்கிடும் பொருட்டு அக்டோபர் 6, 9 தேதிகளில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 146 பிற்படுத்தப்பட்ட சமூகங்களுடன் இணைந்து 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
அதன்படி தற்போதுவரை வெளிவந்துள்ள முதல் பட்டியலின் படி தெங்காசி மாவட்டத்திலுள்ள கற்குடி, சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கும், நாமக்கல் மாவட்டம் குடச்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கும், இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், ஏழு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.