மதியாதோர் சின்னத்தை மனதில் கொள்ளாதே!
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட இதர MBC&DNT பிரிவில் உள்ள 115 சாதியினரும், BC-பிரிவில் உள்ள 146 சமூகங்களும் இணைந்து, 261 சாதிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள பிற சமூகங்களுடன் எந்தவித ஆலோசனையும் செய்யாமல், வன்னியர் ஒருசாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு வழங்கிட சட்டமியற்றிய அதிமுக-விற்கும், 115 சமூகங்கள் அந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தும் அதைப்பொருட்படுத்தாமல், உளொதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்ட திமுக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் அக்டோபர்'6 மற்றும் 9 தேதிகளில், 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூடச்சேரி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.M.C.சுப்பிரமணி மற்றும் வெண்ணந்தூர் ஒன்றியம் 6-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் ஆகியோரை ஆதரித்து சமூகநீதி கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், சீர்மரபினர் நலச்சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினருமான மு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் தீவிர பிரச்சாரம் நடைபெறுகிறது.
வன்னியர் உள்ஒதுக்கீட்டால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமுதாயத்தினர் இழந்துள்ளனர் என்கிற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதனால் 115 சமுதாயங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர் கட்டணமுறை கல்விக்கு செல்லவேண்டிய கட்டாயம் அல்லது படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டுமுறை தொடரும்பட்சத்தில், இச் சமூகங்களில் கல்லூரி பட்டப்படிப்பு முடித்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரியும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். தற்பொழுது அடிமைச்சமூகங்களாக கருதப்படுபவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டினால், அச்சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இன்று படித்து நல்லமுறையில் அதிகார மட்டத்திலும், வேலைவாய்ப்பிலும் இடம்பெற்று வருகின்றனர். முதாலாளித்துவ உலகில் சுரண்டல், அடிமைத்தனத்திலிருந்து ஒரு சமூகம் விடுபடுகையில் அந்த இடத்திற்கு வேறு சமூகங்கள் தள்ளப்படும். அந்தநிலைக்கு இச்சமூகங்களைச் சேர்ந்த வருங்கால சந்ததிகள் தள்ளப்படலாம் என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனவே அந்தச்சூழல் ஏற்படாமல் தடுப்பதும், வருங்கால சந்ததியினரை காப்பதும் நமது தலையாய கடமையாக உள்ளதால், வாக்களிக்கவுள்ள இச்சமூகத்தினர் தங்கள் சந்ததியினரை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.