அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் வேட்பாளர்கள்.
வன்னியர் உள்இடஒதுக்கீடு விவகாரத்தால் 115 சமுதாய மாணவ-மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ள நிலையில், உள்இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு பாராமுகமாக இருப்பதுடன், உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு சார்புநிலையில் செயல்படுவதாக விமர்சனம் எழுந்து வருகிறது. அரசின் நிலைப்பாட்டில் அதிருப்தியடைந்துள்ள 115 சமூகங்கள் இணைந்து, ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆங்காங்கே வேட்பாளர்களை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
அதனடிப்படையில் சமூகநீதி கூட்டமைப்பின் ஆதரவுடன் , நாமக்கல் மாவட்டம், கூடச்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுப்பிரமணி-க்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகித்து, இட ஒதுக்கீட்டில் துரோகம் செய்த அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை புறக்கணித்து, எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும் என தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல், நாமக்கல் மாவட்ட ஊராட்சியின் வெண்ணந்தூர் ஒன்றியம், 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சமூக கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் காந்தியவாதி ரமேஷ்-ஐ ஆதரித்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை & கட்டனாச்சிபட்டி ஆகிய ஊர்களில் துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். இதில் ஊர் முக்கிய பிரமுகர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.
இடஒதுக்கீடு குறித்து எந்தவிதமான புரிதலும் இல்லாமல் அரசியல் கட்சிகளின் அபிமானிகளாக இருந்துவந்த மக்கள், இப்பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வு பெற்றுவருவது ஆண்ட,- ஆளும்கட்சியினருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இப்பிரச்சாரத்தின் பலன் உடனடியாக எதிரொலிக்காவிட்டாலும் வருங்காலங்களில் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் வகையில் இருக்கும் என்பதே தேர்தல் களத்தை அலசும் பாத்திரிக்கையாளர்களின் பார்வையாக உள்ளது.