நூற்றுக்கும் மேற்பட்ட கம்பளத்தார்கள் மீது பாய்ந்தது வழக்கு!
பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-வது நினைவுநாள் தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை விடுதலைக்களம் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இராசிபுரம் பேருந்து நிலையம், போடிநாயக்கன்பட்டி, நாமக்கல், பொம்மைக்குட்டைமேடு, திருச்செங்கோடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருப்படம் அலங்கரிக்கப்பட்டு, பொதுமக்களும், அரசியல் கட்சித்தலைவர்களும், சமுதாய பிரமுகர்களும் அத்திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விடுதலைக்களம் கட்சினர் பல்வேறு இடங்களில் கொடியேற்றி மாவீரனுக்கு வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்திருந்த காரணத்தால், ஒவ்வொரு இடங்களில் கொடியேற்றிவிட்டு வேறுவேறு இடங்களுக்கு கட்சியின் நிறுவனத்தலைவர் பயணித்தபடியால், அவரை பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அக்கட்சியினர் அணிவகுத்து சென்றனர். இதனால் நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையிலும், நாமக்கல் நகரிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.