ஐயா.வையப்ப நாயக்கரின் 44-வது நினைவுநாள்! பிரமாண்டமாக கொண்டாடும் விடுதலைக்களம்!
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், மேலமுடிமன்னார் கோட்டையில் நிலச்சுவாந்தார் குடும்பத்தில் பிறந்து, இராஜகம்பள மகாஜன சங்கத்தின் தலைவராக 1950 முதல் 1977 வரை பணியாற்றிய காலத்தில் சில்லவார், கொல்லவார், தோக்கலவார், தொழுவா நாயக்கர் பிரிவுகளை ஒன்றிணைத்து "தொட்டிய நாயக்கர்" என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவர மூலகாரணமாக இருந்தவர் அமரர்.வையப்ப நாயக்கர். பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பராக இருந்தபடியால் 1957-இல் பெருந்தலைவர் முதல்வராக இருந்தபொழுது தொட்டியநாயக்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் அமரர்.வையப்ப நாயக்கர். கம்பளத்தார் சமுதாயத்தின் முதல், மிகப்பெரிய அமைப்பாக இருந்த இராஜகம்பள மகா ஜன சங்கத்தை தமிழகம் முழுவதும் குக்கிராமம் தோரும் கொண்டு சேர்க்கும் பணியில், சமுதாய தலைவர்கள், ஜமீன்தார்கள், நாட்டாமை, ஊர்நாயக்கர், ஊர்மந்தை அனைவரையும் ஒன்றிணைத்து வெற்றிகண்ட தலைவர் அமரர்.வையப்ப நாயக்கர்.
சுமார் 27-ஆண்டுகாலம் கம்பளத்தார் சமுதாயத்திற்காக அரும்பணியாற்றி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய முதுபெரும் தலைவரின் 44-வது நினைவுநாள் அக்டோபர்'21 (வியாழக்கிழமை) அவர் பிறந்து வாழ்ந்த மேலமுடி மன்னார்கோட்டையில் சிறப்பான முறையில் அனுசரிக்க விடுதலைக்களம் கட்சி ஏற்பாடுகள் செய்து வருகிறது. அன்று காலை 10 மணி அளவில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், வையப்ப நாயக்கரின் மகன்களில் ஒருவரான மலைராஜன் மற்றும் முன்னனி நிர்வாகிகள் அன்னாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். அதனைத்தொடர்ந்து அன்னதானமும், மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழகமெங்குமுள்ள சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் காணொளி மூலம் புகழஞ்சலி செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவண்,
தலைமையகம்,
விடுதலைக்களம் கட்சி,
இராசிபுரம்.